Monday, July 20, 2015

கடவுள் - புரிதல் - குழப்பம்

என் உறவினர் ஒருவர் என்னிடம் வந்து உங்களுக்கு நிச்சயம் விசா கிடைக்கும், நாங்கள் கேட்டால் கடவுள் நிச்சயம் கொடுப்பார் என்றார்.
ஆகா எனக்காக வேண்டுகிறாரே என்றெல்லாம் என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை ஏனென்றால் முதலில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அடுத்து இது நாள் வரை எனக்கு நடந்ததெல்லாம் இயற்கையாக , என் முயற்சியில் மட்டுமே நடந்ததாக நான் நினைக்கும் என் தன் நம்பிக்கை. அமெரிக்கா செல்வதெல்லாம் எனக்கு இலக்காகவோ, இலட்சியமாகவோ இருந்ததில்லை, முதலில் எதேச்சையாக நடந்தது, இரண்டாவதாக என் முயற்சியில் நடந்தது அவ்வளவு தான்.அடுத்து நடக்கப் போவது என் முயற்சியில்/விருப்பத்தின் படி/முடிவின் படி நடக்கும்.
சரி அவரின் கூற்றுக்கு வருவோம்... அவரின் கூற்று மறுபடியும் என்னை கடவுள் - புரிதல் - குழப்பம் என்று இருக்கிறாரே என்கின்ற சிந்தனைக்குள் தான் என்னை கொண்டு செல்கிறது. இதை ஒரு சமூக பிரச்சினையாகத் தான் பார்க்க தோன்றுகிறது.
அது என்ன நாங்கள் கேட்டால் கொடுப்பார்... அவர் அந்த மதத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு அடிப்படையிலான பிரிவில் இருப்பவர். சரி அப்படியென்றால் மற்றொரு பிரிவில் இருப்பவர் கேட்டால் கொடுக்க மாட்டாரா??? எதற்காக நீங்கள் கேட்பதை அவர் கொடுக்க வேண்டும்??? உங்கள் பிரிவுக்கு மக்களை இழுக்கும் முயற்சியல்லவா இது??? மதத்தின் பெயரால், பிரிவின் பெயரால் கடவுளை களங்கப்படுத்துவது நாங்களா இல்லை நீங்களா???
பசியில் பஞ்சத்தில் பட்டினியில் வறட்சியில் நாள் தோறும் இறக்கிறார்களே, விவசாயிகள் இல்லாமையில் தற்கொலை செய்து கொள்கிறார்களே.... இவர்களை போன்று அத்தியாவசிய தேவைக்காக பலர் மடிகிறார்களே அவர்களில் எத்தனை பேர் உங்கள் கடவுளிடம் மன்றாடியிருப்பர், அதையெல்லாம் விடுத்து நீங்கள் டாலர் சம்பாதிக்க American Embassy-யில் உட்கார்ந்து கொண்டு Visa Stamping செய்வது தான் அவரின் வேலையா!!!??? அப்படிப்பட்ட கடவுள் இருந்து என்ன இல்லாமல் இருந்து என்ன...
இல்லை இது தான் கடவுளை பற்றின உங்கள் புரிதல் என்றால் உங்களின் குழப்ப நிலை தெளிய நிச்சயம் உங்கள் கடவுளிடம் நீங்கள் மன்றாடிக் கொள்ளுங்கள்!!!

Wednesday, July 15, 2015

குமரி கண்டமா சுமேரியமா - 2

தமிழரின் தோற்றத்தையும் பரவலையும் அறிந்து கொள்ள இன்று ஈரான், ஈராக் என்றும் பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோனியா என்றும் அதற்கும் முன்பு சுமேரியா என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் நாகரிகமான அதன் வரலாற்றையும், அவர்களால் படைக்கப்பட்ட உலகின் முதல் நெடுங்கதை, முதல் காவியம் மற்றும் முதல் நாவலான கில்காமேஷ் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

தொழில் புரட்சி, மின்னணு புரட்சி, தகவல் தொழில் நுட்ப புரட்சி இதற்கெல்லாம் மூத்த உலகின் முதல...் புரட்சியான விவசாயப் புரட்சியை பொ.யு.மு (கி.மு)8000 வாக்கில் நிகழ்த்தி ஓட்ஸ், பார்லி, சோளம் முதலியவற்றை பயிரிட்டவர்கள் சுமேரியர்கள் என்று சொல்லப்படுகிறது.200 அடி கீழ் பகுதியும், 70 அடி உயரமும் கொண்ட அவர்களால் கட்டப்பட்ட சிகரங்களான ஜிகுராத்துகள் 7500 வருடங்கள் கழித்தும் இன்னும் கம்பீரமாக நிலைத்திருக்கின்றன. இவர்கள் செம்பையும் தாமிரத்தையும் உருக்கி வெண்கலத்தை கண்டுபிடித்தது பொ.யு.மு 3500 அப்பொழுது தான் எழுத்து முறையை கண்டுபிடித்தார்கள்.எகிப்தியர்களின் பிரமிடிற்கு ஜிகுராத்தே மூலம். இவர்களுக்கு பிறகு வளர்ந்த யூதர்கள் உட்பட பல்வேறு இனங்களும் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் அந்த மொழிகளை எழுத இவர்களின் சுமேரிய எழுத்து முறையையே பயன்படுத்தினர்.

தங்களை என்கி என்ற தெய்வம் அழைத்து வந்ததாக நம்பினார்கள். எரிது என்கின்ற உலகின் முதல் நகரத்தை நிர்மானித்தார்கள் அதற்கு மன்னனாக அலுலிம் உலகின் முதல் மன்னனானான், இது நடந்த காலகட்டம் பொ.யு.மு 5400 என்று குறிப்பிடப்படுகிறது.

கில்காமேஷுக்கு வருவோம். பைபிளில் வரும் நோவா கதைக்கு இந்த கதையில் வரும் அதே போன்றதொரு கதை தான் முன்னோடி.கில்காமேஷ் - என்கிடு இந்த இருவரின் சண்டை அதற்கு பிறகான நட்பு...என்கிடுவின் இறப்பு. கில்காமேஷ் சாகாவரம் பெற தில்முன் என்கின்ற இடத்தில் இருக்கும் உத்தன பிஷ்டரை சந்தித்தல். ஒரு பிரளயத்திலிருந்து தப்பிக்க தன்னை சார்ந்தவர்கள் அனைவரையும் ஒரு பெரிய கப்பலின் மூலமாக தில்முன் என்கின்ற இடத்திற்கு வந்து சேர்ந்ததை கூறி மேலும் சில விளக்கங்கள் மூலமாக நிலையாமை என்கின்ற தத்துவத்தை கில்காமேஷுக்கு புரிய வைப்பதன் மூலம் கதை முற்றுகிறது.

சரி இதற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ??? இதற்கும் தமிழர்களுக்கும் தான் தொடர்பு... பிரபாகரனின் இந்த ஆய்வு கட்டுரை இதற்கு முன்பு பலர் வரலாறு, மொழியியல் மூலம் ஆய்வு செய்தது தான்... நீங்களும் சிறிது ஆய்வு செய்யுங்கள் ... அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குமரிக்கண்டமா சுமேரியமா - 1

ஆதி தமிழர்கள் தமிழ் பரப்பிற்கு குடி பெயர்ந்து பரவியவர்கள் என்று பயணிக்கிறது பா. பிரபாகரன் எழுதிய குமரிக்கண்டமா சுமேரியமா புத்தகம்.
இதை சாதாரணமாக படிக்கும் தமிழர்களின் இரத்தம் கொதிக்கலாம், பிரபாகரனையும், இப்படி பதியும் என்னையும் வந்தேறி எனலாம். உங்கள் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வைத்து விட்டு ஆய்வு கட்டுரைக்கு இணையாக இருக்கும் இந்த புத்தகத்தை படியுங்கள், நிச்சயம் நீங்கள் அறிவு வயப்படுவீர்கள், ஆராயத் தொடங்குவீர்கள்.
...
இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்சீனியர், ஒரு அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நபர் தமிழ் சார்ந்த ஆய்வில் இறங்கும் பொழுது அந்த ஆய்வு முயற்சி ஒரு குறுகிய இடத்தில் சுற்றிக் கொண்டிருக்காமல் விசாலமாகும் என்பதற்கு இப்புத்தகம் உதாரணம்.
8 பகுதிகள் அடங்கியிருக்கும் இப்புத்தகத்தில் முதல் பகுதி தமிழர்கள் யார் என்று இருக்கிறது. வரலாறு, அறிவியல்,புவியியல் ஆய்வு என்று விளக்குகிறது/விரிகிறது.

அவரின் வாதம் இது தான் தமிழர்களின் வரலாற்று சின்னங்களாக நாம் பெருமைப்படும் அனைத்தும் மாமல்லபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் உட்பட. இவை அனைத்தும் நமக்கு கிடைப்பது பொது யுகம் என்று கருதப்படும் கி.பி-யில் தான். சுமேரியர்கள், எகிப்தியர்கள், சீனர்கள் உட்பட நமக்கு புலப்படும் அனைத்து பழங் குடியினர்கள் பொது யுகத்திற்கு முன்பே தமது வரலாற்று சின்னங்களை நிறுவியிருக்க, முன் தோன்றிய மூத்த தமிழ் குடியின் வரலாற்று சின்னம் என்று பொ.யு.முன்பாக 500 இல் கட்டப்பட்டது என்று ஒன்றும் இல்லை என்பது ஏமாற்றமாகவும், நெருடலாகவும் இருப்பதாக ஆசிரியர் கூறும் பொழுது நமக்கும் அதே உணர்வே மிஞ்சுகிறது.

இல்லை அவை அனைத்தும் குமரிக்கண்டம் அல்லது லெமூரியாவில் மூழ்கி இருக்கும் என்கின்ற எதிர்வாதத்தை புவியியல் கோட்பாடு ஏற்கனவே மறுத்து விட்டதையும் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்.

அப்படி என்றால்... தமிழர்கள் யார்? எங்கிருந்து பரவியவர்கள்.... தேடுதல் தொடரும்!!! (2 ஆம் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன், என்ன தான் கூறுகிறார் என்று பார்ப்போம்)

மழை

மழையும் மழை சார்ந்த விடயங்களை ரசிக்கும் ரசனை மிகவும் சுவாரசியமானது.
நாம் மழையையும் ரசிப்பதில்லை, அதை சார்ந்த விடயங்களையும் ரசிப்பதில்லை... ஏன் என்று கேட்டால் , அதற்கெல்லாம் இப்பொழுது நேரமேது என்று மிகவும் சவுகரியமான ஒரு சவப் பெட்டிக்குள் அடைபட்டு கிடக்கவே நாம் பிரியப்படுகிறோம்!
ரசிப்பதால் மட்டுமே மனிதன் மதிக்கப்படுகிறான், மனிதனாகிறான்.
...
கொஞ்சம் பின்னோக்கி நானும் நீங்களும் படித்த பள்ளிக்கு செல்வோம். அந்தப் பள்ளி ஒரு அரசு பள்ளியாக இருக்க வேண்டும் , அப்பொழுது மட்டுமே அந்த ரசனை முழுமை அடையும்!
நம் பள்ளியறைக்கு கதவில்லாத வாயிலும், செங்கலின் இடைவெளியால் உருவான சன்னலும் இருக்கும். மழை அளவுக்கதிகமாக அடிக்கும் பட்சத்தில் சாரல், உள்ளே இருந்தும் நம் அனைவரையும் நனைக்கும். நாம் அனைவரும் புத்தகப் பையுடன் சன்னலுக்கு எதிர்புறம் ஒரு சேர குவிந்திருப்போம். நம் கவனங்கள் மழையும் மழை சார்ந்த விடயங்களில் பெரும் பகுதியும், மிச்ச சொச்ச கவனம் பாடத்தில் ஒன்றுபடாமல் அன்றைய பொழுது கழியும்.

மழை நம்மை நனைக்கும், நம்மை நம்முடன் இணைக்கும்.

மழை என்றாலே யாராவது ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வர மாட்டார்கள், அப்பொழுது இரு வகுப்புகளை ஒன்றிணைத்து பாடம் நடத்துவர், அந்த சமயங்களில் எல்லாம் நம் ராஜாங்கம் தான். ஒரு மாணவன் பேசினால், சத்தம் போட்டால் தண்டனை கொடுக்கலாம், ஒட்டு மொத்தமாக அனைவரும் சத்தம் போட்டால் என்ன செய்ய முடியும்? வெளியிலும் அனுப்ப முடியாது, அப்படி அனுப்பினால்... அந்த மழையில் அதை விட சிறந்த தண்டனையை எவரும் நமக்கு கொடுக்கவும் முடியாது!
மணி அடிக்கும் திசையை நோக்கி காத்துக் கொண்டிருப்போம்... நிச்சயமாக பள்ளி முடியும் முன்னரே மணி அடிப்பார்கள்(long bell)... மழையையும் மழை சார்ந்த விடயங்களையும் ரசித்துக் கொண்டே வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடலாம், வீட்டில் அம்மா தேனீரும் , வடை ,பஜ்ஜி செய்து வைத்திருக்கலாம் என்கின்ற ஆசையுடன் பயணப்படுவோம், நாம் விளையாட காகிதக் கப்பலும், ரயில் பூச்சியும் காத்திருக்கும் என்கின்ற ஆவலுடனும்...

சரி... மறுபடியும் சவப் பெட்டிக்குள் போய் அடைபடுவோம்!?

முதிர்ச்சி

இரவு 11 30 மணி.
இடம் Electronic City Bus Stop.

பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன்.
ஒரு பேருந்து நிற்க அதன் அருகில் சிறிய லாரி செல்ல அதற்கு நடுவே இரு சக்கர வாகனத்தில் இருவர் பறக்க, நொடிப் பொழுதில் அந்த லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டு நல்ல வேளையாக சக்கரத்திற்கு வெளியே விழுந்தார்கள்.
...
அங்கிருந்த கூட்டம் என்ன நடந்தது என்றே தெரியாமல் அந்த லாரி ஓட்டுனரை அடிக்க முற்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் அந்த லாரி ஓட்டுனர் அந்த இடத்தில் நிற்காமல் பறக்கவில்லை. தவறை உணர்ந்து கொள்ளாமல் அந்த இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் அந்த லாரி ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் திட்டவோ / அடிக்கவோ செல்லவில்லை. முக்கியமாக அந்த இடத்தில் இருந்த பெரும்பாலோர் அந்த விபத்தை ஏதோ திரைப்பட காட்சியை போல பார்க்காமல் ஓடி சென்று விபத்தில் சிக்கியவர்களை நலம் விசாரித்து ஆசுவாசப்படுத்த முயன்றனர்.லாரி ஓட்டுனரும் இறங்கி வந்து அந்த இருவரிடம் நலம் விசாரித்து விட்டு சென்றார்.

# நமக்கான முதிர்ச்சிகளை / மதிப்புகளை நமக்குள் நாமே தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!

Tuesday, July 7, 2015

சர்ப்பம்


எங்களுக்கு ஒரே கடவுள் இயேசு தான் மேலும் யோகா செய்வது ஹிந்து முனி போல் இருக்கிறது இந்த காரணங்களெல்லாம் போய் இப்பொழுது பதஞ்சலியை ஆதி சேஷன் என்பர் அதாவது பாதி மனிதன் பாதி பாம்பு..அந்த பாம்பு தான் வேதாகமத்தில் சொல்லப்படும் சர்ப்பம்.. ஆதாம் ஏவாள் மனத்தை கெடுத்து நம்மை வீழ்த்தியது அதனால் யோகா செய்யவே கூடாது என்கின்றனர் சில கிறித்துவ நண்பர்கள்.

தமிழ் சித்தர்கள் உலகுக்களித்த யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, அப்படி மோடிக் கூட்டம் பரப்புவது கண்டனத்துக்குரியது என்று பல முறை நாம் சொல்லியாகிவிட்டது, சரி இப்பொழுது இந்த பாம்பு கதையை பார்க்கலாம்!

ஆதாம் ஏவாள் முதல் மனிதர்கள், கடவுள் வேதாகமப்படி உலகை படைத்தது உண்மை என நீங்கள் கொண்டால், எங்களுக்கு அந்த சர்ப்பம் முதல் உண்மை விளம்பியாக, பகுத்தறிவுவாதியாக தெரிகிறது. ஹிந்து மதத்தில் அப்படிப்பட்ட நல்லவர்களை எப்படி அசுரன், அர்க்கன் என்பார்களோ அதே போல் கிறித்துவ மதத்தில் அவைகள் /அவர்கள் சாத்தானாக்கப்பட்டது.

ஆதியாகமத்தில் நன்மை தீமை அறியும் கனியை உண்டாக்கி அதை ஆதாம் ஏவாளுக்கு புசிக்க வேண்டாம் என அறிவுறுத்தி, அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என கட்டளையிட்டு பொய்யுரை பரப்பும் நோக்கம் என்ன??? (சரி எல்லாம் அறிந்த கடவுளுக்கு பின்னாளில் ஆதாம் ஏவாள் அந்த கனியை புசிப்பார்கள் என்று தெரியாதா என்ன... என்பது அடுத்த விவாதப் பொருள் அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம்) நோக்கம் என்னவெனில், இந்த மனிதர்கள் நன்மை தீமை அறியாமல் கண்கள் திறக்கப்படாமல் தனக்கு கீழே இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இந்த குணங்கள் கடவுளின் குணமாக எப்படி இருக்க முடியும்!?

இப்பொழுது அந்த சர்ப்பம் ஆதாம் ஏவாளுக்கு உண்மையை எடுத்துக் கூறி நீங்கள் சாக மாட்டீர்கள், நன்மை தீமை அறிந்து தேவனை போல் இருப்பீர்கள் என்றது. அந்த கனியை புசித்தன் மூலமே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது, அவர்கள் அறிவு பெற்றார்கள், நன்மை தீமை அறிந்தார்கள்... ஏன் தாங்கள் நிர்வாணமாக இருப்பதும் அவர்களால் அறியப்பட்டதற்கு காரணமும் அதுவே!
(இந்த சர்ப்பக் கதையை வைத்துக் கொண்டு அதை ஆதி சேஷனோடு தொடர்பு படுத்தி யோகாவை விமர்சிப்பது தேவையற்றது.)

இப்பொழுது சொல்லுங்கள் யார் உண்மை விளம்பி, யார் பகுத்தறிவு வாதி... நம் அறிவுக்கு , நம் கண்கள் திறக்கப்பட்டதற்கு காரணம் யார் ? நன்மை தீமை அறிவதற்கு காரணம் யார் ???

அந்த சாத்தானே, அந்த அசுரனே, அந்த அரக்கனே தற்காலத்தில் பகுத்தறிவு பேசும் நாத்திகர்களாயிருக்கக் கூடும்!!!

# Dedicated to Ingersoll, Ambedkar & Periyar!

Wednesday, June 3, 2015

எதிர்மறை

எதிர் மறை தோல்வியின் / பின்னேற்றத்தின் வெளிப்பாடா... எதிர்மறையாளர்கள் கலவரக்காரர்களா?

என்ன நீங்க பெரும்பாலும் எதிர்மறையாவே எழுதுறீங்களே என்று கேட்பவர்களிடம் ஆமாம் எதிர்மறை தாக்கம் / சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போல அதை பற்றித்தான் பெரும்பாலும் பேசியாக வேண்டும் என்று கூறிக் கொள்ள விழைகிறேன்!

பெரியார் எதிர்மறையாளர் தான் ஆனால் அந்த எதிர்மறை சிந்தனை தான் சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது மேலும் பெரியார், பெரியாரியல் எந்த வித சாதி ,மத வகு...ப்பு மோதலுக்கு காரணமாக இருந்தது என்று கூற முடியுமா???(ஆமாம் பலருக்கு கேள்வியே கேட்காமல் உண்டு என்றால் நேர்மறை, விமர்சனம் செய்து இல்லை என்றால் எதிர்மறை!!!).
பெரியாரியல் தோல்வியடைந்து விட்டதா,சமூகத்தை முன்னேற்றவில்லையா??? பெரியார் இல்லை என்றால் இங்கு இட ஒதுக்கீடு ஏது, சமூக நீதி ஏது, சுய மரியாதை ஏது ??? நாம் எங்கே படித்திருக்க முடியும்??? இந்த சமூகத்தில் நம் கருத்தை எப்படி தைரியமாக கூறும் உரிமை கிடைத்திருக்க முடியும்???

சமீபத்தில் நடந்த மட்டைப் பந்து ஆட்டத்தில் ஹிந்தியா நன்றாக விளையாடியது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் , அதை ஒரு பெரிய விடயமாக எடுத்து பத்திரிகையும், பலரும் பேசும் பொழுது அந்த நேரத்தில் நாம் விமர்சனத்தை வைப்பது தவிர்க்க முடியாததாகிறது. இது எதிர்மறை அல்ல...சிந்தனையோட்டம் ஒரெ திசையில் இருக்கும் மக்களின் மூளையில் இந்த எதிர்மறை விமர்சனத்தின் மூலம் பல நேர் மறை விடயங்களை வித்திடும் முயற்சி.

உதாரணமாக Economic Times என்ற இதழ் தோனி தன் குழந்தையை பார்த்து 2 மாதம் ஆகிவிட்டது, இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று இணைய செய்தியில் ஆரம்பித்தது. வெட்ட வெளிச்சமாக தெரிவது இது பத்திரிகை வியாபார உக்தி. அதற்கு பதில் அளிக்கு விதமாக அனைவரும் உருக... ஒருவர் மட்டும் சற்று வித்தியசமாக தோனியாவது ஏதாவது வகையில் Computer, Skype போன்ற தொழில் நுட்பத்தில் தன் குழந்தையை பார்க்க முடியும் , ஆனால் நம் எல்லை வீரர்கள் எத்தனை வருடங்கள் தங்கள் குழந்தைகளை பார்க்கும் வழிவகை இல்லாமல், சில நேரம் பார்க்காமலேயே இறந்தும் விடுகிறார்கள் அதனால் இந்த விடயங்களை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள் என்று பதில் அளித்திருந்தார்.இந்த எதிர் மறை சிந்தனை தான் நேர் மறையான சில விடயத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது.

# புரியும் படி சொல்வதானால் ஒரெ மாதிரி சிந்தித்தால் நேர்மறை, கொஞ்சம் மாற்றி யோசித்தால் எதிர் மறை! அம்மணமாக திரிபவர்கள் கூட்டத்தில் ஆடை அணிபவன் பைத்தியக்காரன் தான்!!
ஒரெ மாதிரி சிந்தித்து , நேர் மறையாக இருக்கிறேன் என்று அம்மணமாக திரிவதை விட, மாற்றி யோசித்து , எதிர் மறையாக இருக்கிறேன் ஆனால் ஆடை அணிந்திருக்கிறேன் என்பதாகவே இருந்து விட்டு போகலாம். அவர்களின் பார்வையில் அது பைத்தியக்காரத்தனமாகவும் இருந்து விட்டு போகட்டும்!!!

Komban

வீரத்தின் அடையாளமாக மீசையை எந்த இயக்குனர், நடிகர் தமிழ் திரைக்கு கொண்டு வந்தார்கள்?
முறுக்கு மீசை வைத்தால் வீரன், அதுவே கிர்தா தொட்டு தலை மயிரில் இணைந்தால் அவர் பெரிய சண்டியர், பெரிய கொம்பனாமாம்.

தேவர் மகன், நாட்டாமை இவர்கள் இந்த மீசைக்கு சொந்தக்காரர்கள். மீசையை வருடிக் கொண்டு,முறுக்கிக் கொண்டு இவர்கள் சாதிப் பெருமை பேசுவது வீரத்தின் அடையாளமா இல்லை அவமானமா???

இதே திரைப் படங்களில் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இவர்களுக்கு எதிரே நிற்பவர்கள் யாருக்காவது பெரிய மீசை இருக்குமா என்றால்... இருக்காது!
இந்த போலி திரை பிம்பங்களோ அவர்களால் உருவகப்படுத்தப்படும் நபர்களோ மீசை வளர்த்ததை தவிர என்ன வீர சாகசங்கள் செய்தார்கள்???

# நம் வாழ் நாளில் நாம் பார்த்த நிஜ வீரன் பிரபாகரனுக்கு சில காலங்கள் மீசையே இருந்ததில்லை, கடைசி கால கட்டத்தில் சாதாரண மீசையில் தான் காட்சியளித்தார். முறுக்கவும் இல்லை, நீட்டி முழங்கவும் இல்லை!!!

ஜெய காந்தன்

ஜெய காந்தன் அல்ல ஜெய காந்தம் அவர், படிப்போரை அவர் பக்கம் இழுப்பதால்...

அவர் எனக்கு அறிமுகமாகியது 2002 - 2003 இலயோலா தமிழ் துறையில்.
அங்கு தான் முதன் முதலாக பார்த்தேன் இல்லை படித்தேன்.

கணிப்பொறி முதுகலையில் படித்த பொழுது நான்கு புத்தகங்கள் நூலகத்தில் எடுக்கலாம் என்ற நிலையில் நான்காவதாக அறிமுகமாகி , பிறகு நான்காகவும் ஆக மாட்டாரா என்ற ஆவலை தூண்டியவர்.

ஜெய காந்தன் சிறு கதைகள் ...ஒவ்வொன்றும் சிந்தனையை விதைக்கும் விதைகள்.
அடுத்து என்ன எழுதுவார், எப்படி முடிப்பார் என்கின்ற ஆர்வத்தை விருட்சமாக்கும் விதைகள்.

நான் கிறுக்கிய சில கதைகளில் அவரின் தாக்கம் இருக்கிறது என்றான் நண்பன்.
அவருக்கு முன்னால் அவைகள் எல்லாம் ஒரு ஆக்கமா என்றிருக்க, எப்படி தாக்கம் இருக்கும் என்று நினைத்தேன் இருந்தும் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அன்று புத்தகமாக அறிமுகமானவர் இன்று என் அலைபேசியில் App-ஆக தொடர்கிறார்.

81 வயதில் இறப்பு இயற்கை தான், ஆனால் அவரின் இடத்தை வேறொருவரால் நிரப்புவது இயற்கையில் சாத்தியமல்ல என்பதால் இன்னமும் வாழ்கிறார்.

அறிவாளிகள்

கிழிந்த சட்டையும், அழுக்கு வேட்டியும் அகத்தில் வெகுளிதனமும், புறத்தில் புன்னகை தவழும் இவரை நீங்கள் கோயிலிலோ, தேவாலயத்திலோ இல்லை தர்காவிலோ பார்த்திருக்கலாம்.
நானும் பார்த்தேன். என்னை சுற்றி சுற்றி வந்தார். என்னிடம் பேசவும் வரவில்லை, என்னிடமிருந்து காசையும் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒவ்வொருமுறையும் கேள்விக் கணையுடன் அவரை பார்க்கும் பொழுது எனக்கு பதிலாக சிரிப்பை மட்டுமே கொடுத்தார்.

தனிமையில் சிறை பட்டிருக்கும் அவருக்கு கூட்டமும் குடும்பமும் விடுதலையை உணர்த்தியிருக்கக் கூடும்,

அங்கு வரும் மக்கள் அவரை துரத்தி அடிப்பார்கள், அவரோ அங்கிருக்கும் சிறுவர்களை துரத்தி விளையாடுவார்.

கடவுளை காண வருவோர் மத்தியில் கடவுளை பற்றி கண்டு கொள்ளாமல் கடவுள் தலத்தில் குடியிருக்கும் ஒரு புதிர்முரண் அவர்.

மக்கள் எல்லாம் பணம் பகட்டு புகழ் என்று ஒரு திசையில் பயணிக்க இவர் மட்டும் அவருக்கான உலகில் வேறொரு திசையில் பயணித்துக் கொண்டிருப்பார்.

பல விடயங்களில் பைத்தியமாக இருக்கும் நாம் அவரை பைத்தியம் என்போம்.

கிளம்பி வரும் பொழுது அவரிடம் ஒரு 10 ரூபாயை கொடுத்தேன். இதை போன்ற பல பத்து ரூபாய்களை அவர் பார்த்திருக்கலாம், என்னைப் போன்ற பல மனிதர்களை அவர் பார்த்திருக்கலாம்.
நாம் அவரை போன்ற மனிதர்களை பார்ப்பது அரிது. நமக்கு அனுபவத்தையும் சிந்தனையையும்
அவர்கள் அறியாமலே நமக்கு கொடுத்து விடுவார்கள்.

அவர்கள் வாழ்க்கையை நமக்கு உணர்த்தும் அறிவாளிகள். ஆனால் அந்த அறிவு அவர்களுக்கு இருப்பதாக நாமும் உணர்வதில்லை அதை அவர்களும் அறிவதில்லை!

குறும்படம்

குறும்படம் என்பது நிமிடத்தில் நேரத்தில் குறுகியதாகவும், நோக்கத்தில் , தாக்கத்தில் நெடியதாகவும் இருக்க வேண்டும்.

படத்தில் குறைவாக பேசி, படத்தை பற்றி வெளியில் அதிகமாக பேச வைக்க வேண்டும்.
படத்தின் முடிவு நம் சிந்தனையின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
படத்தின் திருப்பங்களில் நாம் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்.
படத்தில் வித்தியாசமும், புதுமையும் இருப்பதோடு அந்த படமே வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் நான் எப்பொழுதோ பார்த்த ஆனால் மனத்தில் இன்றும் பசுமரத்தாணி போல இருக்கும் இந்த இரண்டு படங்களை போல இருக்க வேண்டும்.

1.கால்பந்து ஆட்டம் நடந்து கொண்டிருக்கும், மைதானத்தின் ஓரத்தில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எப்படி ஆட வேண்டும் என்றும் எப்படி ஆடினால் கோல் போட முடியும் என்றும் ஆட்டம் முழுக்க அவ்வளவு ஆர்வமாக நேர் வர்ணனை கொடுத்துக் கொண்டிருப்பான். ஆட்டம் முடியும், அவனுக்கு பக்கத்தில் இருக்கும் தன் காலை தாங்கும் அந்த ஊன்று கோலை எடுத்துக் கொண்டு, ஊன்றி ஊன்றி நடந்து செல்ல படம் முடியும்.

2.வகுப்பறையில் ஆசிரியர் வருகை பதிவு வாசிப்பார். வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு எண்ணுக்கும் வருகையை பதிவு செய்ய, 12 என்று வரும்பொழுது வருகை பதிவு செய்யும் மாணவனின் குரல் வராது அந்த சமயத்தில் ஒரு பேக்கரியை காண்பிப்பார்கள் அங்கு ஒரு சிறுவன் வேலை செய்வது போல...இப்படியாக இரண்டு மூன்று சிறுவர்களை காண்பிப்பதோடு படம் முடியும்.

நேபாளம் - பாவ மன்னிப்பு !!!

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

நம்பிக்கையோ நம்பிக்கை இன்மையோ மனித நேயத்தை நோக்கித் தான் நகர வேண்டும் அப்படி நகர வில்லையென்றால் அந்த நம்பிக்கையாலோ நம்பிக்கை இன்மையாலோ என்ன பயன்?

அதாவது பெரியாரின் , இங்கர்சாலின் நம்பிக்கை இன்மை, வள்ளலாரின், நாராயண குருவின், தெரசாவின் நம்பிக்கை கலவரத்தை நோக்கியோ, அழிவை நோக்கியோ பயணிக்க சொல்லவில்லை மாறாக வளர்ச்சியை நோக்கி, மாற்றத்தை நோக்கி பயணிக்க கற்றுக் கொடுத்தது.

அப்படி மனித நேயத்தை நோக்கி நகராமல் சிலர் தடுக்கும் பொழுது , அந்த பாதையை சிலர் மாற்றும் பொழுது அதில் இருக்கும் உண்மை இன்மையை விளக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்கின்ற அடிப்படையில் தான் இதை எழுதுகிறேன்.

நேபாளம்...அழிவின் கோர முகத்தை, அதன் உச்ச கட்டத்தை பார்த்த நேரம்.பிஞ்சு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த வயோதிகர்கள் வரை ஒன்றும் இல்லாமல் உருக்குலைந்த நேரம், இடிபாடுகளில் தவிடு பொடியான நேரம், பூமிப் பந்தின் விளையாட்டில் புதையுண்ட நேரம் மத நம்பிக்கையில் திளைத்த ஒருவர் இப்படி பதிவிடுகிறார்... அங்கு போதனைக்கு சென்ற ஒரு போதகரை எரித்துக் கொன்றார்கள் அதன் பலன் இது என்று.

எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் மனைவியிடத்தில் தனிப்பட்ட முறையில் என் கருத்தை பற்றி விவாதித்தாலும் அவர்களுக்காக எப்பொழுதாவது தேவாலயத்திற்கு செல்வது உண்டு, அந்த நேரத்தில் பிரசங்கத்தை மட்டும் ஆவலாக கவனிப்பேன் ஏதாவது வித்தியாசமாக மக்களுக்கு இந்த பாதிரிமார்கள் கூறுகிறார்களா என்று. அப்படி ஒரு சமயத்தில் உறவினர் உறவில் இருக்கும் ஒரு பாதிரியார் இப்படி கூறினார். விபச்சாரமும், விக்ரக ஆராதனையும் தான் நேபாள அழிவிற்கு காரணம் என்று, அதாவது கடவுள் தான் அதற்கு காரணம் என்கின்ற அடிப்படையில்!(குறைந்தது அங்கு ஒரு 200 மக்களாவது இருந்திருப்பார்கள் அவர்களின் மத்தியில் அந்த பரப்புரையானது அரங்கேற்றப்பட்டது.)கடவுளின் அனைத்து செயலுக்கும் காரணம் இருக்குமாம், அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டுமாம்

எனக்கு பல விடயங்கள் இங்கு புரியவில்லை... அந்த போதகரை எரித்துக் கொன்ற 10 - 15 பேரை அடையாளம் கண்டுபிடித்து உங்களின் கடவுளால் தண்டிக்க முடியாதா??? குழந்தைகள் செய்த விபச்சாரம் என்ன?? அவரை ஆராதிக்காவிட்டால் கொன்று விடுவாரா??? அதுவும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவாரா??? உலகில் உள்ள அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அங்கு இருப்பவர்கள் யார்?? மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து கலவரம் உண்டாக்குவது கடவுளா இல்லை கடவுளின் பெயரால் நீங்களா???

அடுத்து எல்லா உயிர்களையும் தன்னியிர் போல் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், எதிரியையும் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள் இப்படி செய்வாரா என்ன!?
சரி கடற்கறை ஓரத்தில் கையை பின்புறமாக கட்டி சுட்டுக் கொன்றார்களே, அவர்களின் செயலுக்கு அவர்களின் கடவுளை இழுப்பார்கள் இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டதுக்கு அவர்களின் கடவுளை காரணம் காட்டியதை போல. இந்த மாதிரியான நம்பிக்கைகள் மனித நேயத்தை சிதைக்கவே செய்கின்றன.

குறிப்பு :- உங்கள் கடவுளை நான் மனிதனாக மதிக்கும் அளவிற்கு கூட நீங்கள் அவரை கடவுளாக புரிந்து கொள்ளவில்லை!

என் எழுத்துக்கள் உங்களை காயப்படுத்தினால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் உங்களின் இது போன்ற நம்பிக்கைகள் உங்கள் மதத்தார் பலரையே காயப்படுத்தியிருக்கிறது. உங்களின் நம்பிக்கை படி நேபாளத்தில் இறந்தோரின் ஆன்மாவை காயப்படுத்தியிருக்கும், உங்களின் நம்பிக்கை படி உங்களின் கடவுளையும் வேதனை படுத்தியிருக்கும்.

நாளை திருப்பலியில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்!

The Great Balu - தலைமுறைகள்

படம் ஆரம்பிக்கும் பொழுது அவருக்கு முதல் stroke வந்ததாக காண்பிப்பார்கள், படம் முடிந்து வெளியான பிறகு அவர் இறந்து இரண்டாவது stroke- ஐ நமக்கு கொடுத்து விட்டார்!

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல கேள்விகளுக்கு , குழப்பத்திற்கு உரியது அதனால் தான் இந்த கடைசி படத்திலும் தனக்கு இரண்டாவது மனைவி இருந்ததாக காண்பித்தாரோ என்னவோ...

தமிழ் ஆசிரியரான ஒருவர் தன் பேரன் தமிழில் பேச முடியாமல் இருக்கிறான் என்று கேட்கும் பொழுது தன் தலையில் அடித்து என் பேரன் என் பேரன் என்று ஆதங்கப்படும் காட்சி இயலாமையின் உச்சம்.
நம் தலைமுறைக்கு ஆற்றை அறிமுகப் படுத்தும் காட்சி அழகியலின் சாட்சி.

தாத்தாவுக்கு கடவுளாக தெரிவது பேரனுக்கு கல்லாக தெரிகிறது, பேரனுக்கு அவனாக தெரியும் photo தாத்தாவுக்கு சாதாரண paper-ஆக தெரிகிறது. வயது வேறுபாட்டின் , அனுபவத்தின் முரண்கள்.

5 வயதான ஒரு சிறுவன் தன் அம்மாவின் மார்பை பார்த்து இன்னமும் உனக்கு பால் வருமா என்று கேட்பதும், நீ எல்லாவற்றையும் வற்றிப் போக செய்து விட்டாய் என்று அம்மா கூறுவதும், கொஞ்ச தூரம் நடந்து சென்று திரும்பி வந்து அம்மாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது நம்மையும் சேர்த்து அரவணைக்கிறது.

தாத்தா சொல்லிக் கொடுத்து நெல் மணியில் பேரன் அ போடுவது ஆகட்டும், சிறு நீர் மூலம் ஆற்று மணலில் பேரன் அ போடுவதை பார்த்து முதலில் கோபக் கனலில் முகத்தை வைத்து அடுத்து அதே போல் தானும் அ போட்டு முயற்சிப்பது ஆகட்டும்...பேரன் அதை பார்த்து உங்களின் அ கொஞ்சம் shaggy-ஆக இருக்கிறது என்று கூறுவது ஆகட்டும்.இது போல் இனி யார் காட்சி அமைக்க முடியும்?

இந்த நாகரிக உலகில் பெரியவர்கள் முன்பு காலுக்கு மேல் கால் போடக் கூடாது என்று எந்த தாத்தா தன் பேரனுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பு அமையும்!

பிள்ளை(சாதிப் 'பிள்ளை') வாலை நறுக்கி இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்பதும், எல்லா கடவுளும் ஒண்ணு தான் என்பது இப்ப தான் என் மரமண்டைக்கு புரிந்தது என்பதும் நம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டியது.

சாவின் அறிமுகத்தை தன் பேரனுக்கு சொல்லி, தன் முகம் வெளுருவது எதார்த்தம்.
உன் தந்தை ஹிந்து, அம்மா கிறிஸ்துவர்... அப்ப நீ யார் என்று ஒரு பாதிரி அந்த சிறுவனிடம் கேட்க, கொஞ்சம் யோசித்து நான் ஆதி என்பானே... செருப்படி அது. ஆமாம் நம் தலைமுறை மதத்தையும் கடக்கும் என்கின்ற ஆவல் அது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதையும், சிறியவர்கள் மூலமாக பெரியவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதையும் இயல்பாக கூறியிருக்கிறார்.

I dont speak Tamil என்று பேரன் தாத்தாவை சந்திக்கும் பொழுது அவன் தமிழ் பேசவில்லை, அதே பேரன் தனது தாத்தாவை பற்றி எழுதி மேடையில் அவரை பற்றி பேச முயற்சிக்கும் பொழுது அவன் வாயிலிருந்து தமிழ் வரவில்லை. இயக்கத்தின்(direction) வீரியமான வெளிப்பாடு அது.

இவர் போன்ற படைப்பாளிகளின் இழப்பு எல்லாம் இளையராஜா போன்றவர்களின் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் நிகழ்வுகள் தான்!

அட போங்க பாலு சார்....உங்களின் மூளை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தது, இந்த படத்தின் ஒவ்வொரு Frame-லும் அது வெளிப்பட்டதே...இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருந்து பஞ்சத்தில் இருக்கும் தமிழ் திரையுலகிற்கு மேலும் சிறிது ஊட்டம் கொடுத்திருக்கலாமே..

நாங்கள் தமிழையும் மறக்க மாட்டோம், தாத்தாவையும் (உங்களையும்) மறக்க மாட்டோம்!

இப்படி ஒரு சாட்டையடியை எங்களுக்கு கொடுத்து விட்டு நீங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நாங்களோ குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருக்கிறோம்!!!

# தலைமுறைகள். Special Thanks to Director M.Sasikumar who produced this Epic.

May 29, 2015

"ஆடிக்கு பின்னால் ஆவணி என் தாடிக்கு பின்னால் தாவணி"
"வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஆளுக்கொரு வீடு தருவார்களா"
"வளையும் நாணல் புயற்காற்றிலும் பிழைத்துக் கொள்கிறது, வளையாத் தென்னை ஒடிந்து வீழ்கிறது."

என்னடா சம்பந்தமே இல்லாம பேசுறானேனு பாக்குறீங்களா??? இவை அனைத்தும் என் பள்ளி பருவத்தில் (6 முதல் 12) என் காதில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் விழுந்தவை. அது என்ன சந்தர்ப்பம் , எவரால் என்பதெல்லாம் எனக்கு நினைவு இல்லை எப்படி முதல் காதல் நமக்கு நினைவில் இருக்கும் ஆனால் அந்த கால க...ட்டம் மங்கலாக தெரியுமோ அது போல.
நம்மை கவரும் நிகழ்வுகள் கடைசி காலம் வரை பசுமையாக நினைவில் நிற்கும், எதற்காக அந்த விடயங்கள் நம்மை கவர்ந்தன என்ற காரணம் புரியாமலேயே...
நான் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்க ஆரம்பித்த , இன்று நாத்திகனாக இருக்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்ட என் முதல் பள்ளி, கல்லூரி காலத்தில் மறுமுறையும் அங்கு சென்று கண்ணீர் சிந்த வைத்த என் முதல் பள்ளி Sri மகா கணேச வித்தியா சாலா நடு நிலைப் பள்ளி, அம்பத்தூர்.
முதல் வகுப்பில் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த இரண்டாவது அம்மா சரஸ்வதி டீச்சர்
3 ஆம் வகுப்பில் லால் பகதூரை பற்றி பேசின என் முதல் பேச்சு போட்டி (அப்பா எழுதி கொடுத்து நான் செய்த ஒப்புவித்தல் போட்டி அது!)
ரஜினிக்கு இருப்பது போல மூக்கின் மேல் கறுப்பு அடையாளம் இருக்க , அதை ரத்தம் வர தேய்த்தது.
நானும் எனக்கு முதல் நண்பனாக மாறிய தேவேந்திரனும் முதலில் சண்டை போட்டு என் வாய் உடை பட்டது!
என்னை ஏதோ விதத்தில் கவர்ந்த பெண்ணின் ஜடையை எவனோ ஒருத்தன் பள்ளி முடிந்ததும் இழுத்துக் கொண்டு ஓட , அவனை அடித்து துவைத்திருக்க வேண்டுமே என்று கோபப்பட்டது.
வீட்டு உணவை நண்பர்களுக்கு கொடுத்து சத்துணவை உண்டது

6 ஆம் வகுப்பில் என் முதல் கவிதை!
என் ஆச்சியுடன் கடவுளை பற்றி நக்கல் செய்து அவரை உசுப்பேற்றுவது
பேருந்து நிறுத்ததில் குச்சி ஐஸை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வகுப்பு தோழனின் கையை தட்டி விட்டு அவனிடம் அகப்படாமல் ஓடியது.
Maggi Cover-ஐ சாலை சாலையாக அண்ணனுடன் சேர்ந்து பொறுக்கியது!
உயிர் நண்பனுடன் காரணமில்லாமல் சண்டை ,,,அதற்கு பிறகு இணைதல்.
8 ஆம் வகுப்பில் சமூக அறிவியல் ஆசிரியரை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தது அதற்கு பிறகு அந்த ஆசிரியருடன் நெருக்கமானது.
9ஆம் வகுப்பின் ஆண்டு தேர்வில் ஆங்கில தேர்வில்
தேர்ச்சி ஆக முடியுமா என்கின்ற பயத்தில் கடவுளை கும்பிட்டு அதற்கு பிறகு எனக்கு தன் நம்பிக்கை இல்லையா என்று சுய ஆய்வு செய்து எந்தவொரு நெருக்கடியான கால கட்டத்திலும் எவரையும் நம்பாமல் முழு நாத்திகன் ஆனது

11 அல்லது 12 ஆம் வகுப்பில் சுபவீ எழுதி கொடுத்த குறிப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரம் பற்றி 50 ஆண்டு சுதந்திர பொன்விழாவில் பேசி சர்ச்சையானது.
கல்லூரி படிக்கும் பொழுது எதேச்சையாக சரஸ்வதி டீச்சரை சந்தித்து என் வாழ்வின் ஆரம்பத்தில் பயணித்த அவர்களுடன் அவர்கள் வாழ்வின் கடைசி கால கட்டத்தில் பயணித்து அவர்களின் மரணத்தையும் நான் சந்தித்தது!

# நாளை அடி எடுத்து வைக்கப் போகும் 33ஆம் அகவையில் இந்த நிகழ்வுகள் எவ்வளவு பசுமையாக இருக்கின்றன.
இன்று இறந்தால் காலச்சக்கரம் பின்னோக்கி சுழன்று நான் அந்த காலத்திற்கு செல்ல முடியும் என்றால் நான் அதற்கு முழு மனதாக தயாராக இருக்கிறேன் !!!

யான் பெற்ற இன்பம் பெறுக எம் பெற்றோர்

Escalator - இல் எப்படி ஏறி இறங்க வேண்டும் என்பதில் இன்னமும் தடு மாற்றம் அவர்களுக்கு...
என் மகனுக்கு பழக்கமாகிப் போன பல உணவு வகைகள் அவர்களுக்கு இன்னமும் புதியது...
2D என்கின்ற தொழில் நுட்பத்தையே அவர்களால் இப்பொழுது தான் உள்வாங்கிக் கொள்ள முடிகிற பொழுது 3D, 7D மற்றும் 8D என்பதெல்லாம் அவர்களுக்கு அபூர்வமான ஒன்று.
Faloota ,Cold Coffee இவற்றையெல்லாம் இப்படியெல்லாம் இருக்கிறதா என்று அவர்கள் அதிசயமாக பார்க்கக் கூடும்.
என் மகன் விளையாடும் Video Game-ஐ அவர்கள் பெரிய விடயமாக பார்க்கிறா...ர்கள்.

இது போன்று பலப் பல....

அவர்களை நாம் சாதாரணமாக கூறிவிடுகிறோம் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று. அவர்கள் அறிவிலிகளா????? இல்லை அப்பாவிகள்!

நாம் நல்ல நிலையை அடைய அவர்கள் பல விடயங்களை துறந்தார்கள், இழந்தார்கள் , மறந்தார்கள். நாம் இன்று நல்ல நிலையை அடைந்த பிறகு அவர்களையே நாம் துறக்கிறோம், இழக்கிறோம், மறக்கிறோம்,அறியாமையில் இருப்பதாக வேறு குற்றம் சுமத்துகிறோம்.

# யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு முன்னால் யான் பெற்ற இன்பம் பெறுக எம் பெற்றோர் என்று நினைப்பதே சிறந்த பொது நலமாக இருக்க முடியும்!

Friday, March 20, 2015

மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

ஒரு இசுலாமிய நண்பர் கூறினார் இசுலாமியர்கள் உடல் தானம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லையாம்... இறந்த பின்பு உடல்கள் சிதைக்கப்படுகிறது மேலும் வெட்க தலம் பாதுக்காக்கப்படுவதில்லை அதனால் அனுமதி இல்லையாம்.

சில காலம் முன்பு சங்கராச்சாரியார் கண் தானத்திற்கு எதிரான தன் கருத்தை கூறியிருந்தார்...கண் தானம் செய்யக் கூடாது ஏனென்றால் அப்படி தானம் செய்பவர்கள் சொர்க்கலோகத்தை காண முடியாதாம்.

ஏன் கிறித்துவத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்களும் உடல், உறுப்பு தானத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

# இறந்த பின்பும் நம்மை மூட நம்பிக்கையில் கட்டிப் போட்டு, மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

அமெரிக்கா சொல்லித் தந்த அறிவு

அமெரிக்கா அத்தியாவசியமான சில தேவைகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அவசியமான சில விடயங்களையும் கற்றுத்தந்திருக்கிறது.

ஊரே குப்பை காடாக இருந்தாலும் கையில் இருக்கும் குப்பையை வெளியில் போடுவதற்கு இன்னமும் மனம் வரவில்லை.

சின்ன உதவிகள் யாராவது செய்த போதிலும் , சின்ன தவறுகள் நாம் செய்த போதிலும் நன்றி, மன்னிக்கவும் என்று கூறுவதில் கூச்சம், வெட்கம் வரவில்லை.

எங்கு சென்றாலும் வரிசையாக நிற்காமல் ஆடு மாடுகளை போல கூட்டமாக நிற்கும் மனம் வரவில்லை.

நமக்கு பின்பு வரும் நபரை கருத்தில் கொள்ளாமல் , கதவை திறந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் மனமும் வரவில்லை.

மொத்தத்தில் நாம் இருக்கும் சூழ் நிலையை, நம்மை சுற்றியிருக்கும் சுற்றத்தாரை கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவு ... ஆங்கிலேயனிடம் விடுதலை பெற்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்து இவ்வளவு ஆண்டு காலம் நம் அரசியல் வாதிகள் நமக்கு சொல்லித்தராத அறிவு சிறிது வந்திருக்கிறது!!!

தலைமுறைகள் கடந்து...

கடந்த 1 மாத காலமாக பாலு மகேந்திராவை அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தேன்...

நீங்கள் கேட்டவை, ராமன் அப்துல்லா,சந்தியா ராகத்தை மறுமுறை பார்த்தேன்
தலைமுறைகளுக்கு பிறகு அவரின் பேட்டியை பார்த்தேன்...அவர் கூறிய 3 விடயங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது இப்பொழுது அதனுடன் அவரது இறப்பும்......

எனக்காக நான் எடுத்த படங்கள் என்று வீடு, சந்தியா ராகம், தலைமுறைகளை குறிப்பிட்டார்,மற்றவை அனைத்துமே adjustment என்றார். ஒன்று சினிமா இல்லையென்றால் ஒன்றும் இல்லை இந்த நினைப்பில் தான் சினிமாவுக்கு முயற்சி செய்தேன் என்று கூறினார்.

அதற்கடுத்து...என்னிடம் இருக்கும் அனைத்து கதைகளையும் எடுக்காமல் செத்து விட மாட்டேன் என்று கூறினார்... சாவின் வாயிலில் அவர் இருக்கும் பொழுது அந்த 3-ஆவது விடயம் அவரின் மனத்தை என்ன பாடு படுத்தியிருக்கும்? மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.


தலைமுறைகள் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. பல காலங்களாக தன்னை தொப்பியுடனும், கறுப்பு கண்ணாடியுடனும் அடையாளப்படுத்திய பாலு மகேந்திரா தலைமுறைகள் படத்தில் அந்த அடையாளம் இல்லாமல் இயல்பாக தன்னை வெளிப்படுத்தி , நடித்தும் இருந்தார். இயற்கையான அடையாளமான அது தான் இறப்பின் அடையாளமும் கூட என்று அவருக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும் போல!!!

அந்தப் படத்தில் ஒரு காட்சி...ஆதி என்கின்ற சிறுவனிடம் ஒரு பாதிரியார் கேட்பார். தம்பி உன் அப்பா ஒரு ஹிந்து, அம்மா ஒரு கிறித்துவர், அப்படியென்றால் நீ யார் என்று.அந்த சிறுவன் கொஞ்சம் யோசித்து வெகுளியாக நான் ஆதி என்பான்.

அடுத்த தலைமுறைகளுக்கு மத அடையாளம் தேவையில்லை பெயர் அடையாளமே போதுமானது (சில கழிசடைகள் பெயரிலும் மத, சாதி அடையாளத்தை தேட முயலும் என்பது வேறு விடயம்!?)என்பதை இவ்வளவு எளிமையாக அதே சமயம் அழுத்தமாக எத்தனை இயக்குனர்களால் புரிய வைக்க முடியும்?????

# இயற்கையோ அல்லது கடவுளோ கொஞ்சம் காலம் தாழ்த்தியிருக்கலாம்...
அவரின் படங்கள், புகழ் தலைமுறைகள் கடந்து வாழும், பேசப்படும்.....


மதம் சீர்படும், மனிதம் மேம்படும்!!!

ஒரு பாதிரியார்... என் உறவினர். எந்த வித மதமாற்ற செயலும் புரியாமல் பெங்களூருவில் குடிசை வாழ் குழந்தைகளுக்காக இலவச கல்வியை அவரது அமைப்பின் மூலம் கொடுக்கிறார். தன் பிரசங்கத்திலும் பைபிள் வாசகங்களை இக்கால சமூக பிரச்சினையுடன் கலந்து பேசி புரிய வைப்பார்.

மற்றொரு பாதிரியார்... அப்பாவின் மாணவர். வேடந்தாங்கல் பங்கில் பணியாற்றிய பொழுது தலித் கிறித்துவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் வன்னிய கிறித்துவர்கள் தடுத்த பொழுது அந்த தலித் மக்களுக்காக போராடி உள்ளே நுழைய செய்தார்.

இவர்கள் இருவரும் மத நம்பிக்கை உடைய மத வாதிகள் தான். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தான். ஆனால் எதார்த்த வாதிகள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாத பகுத்தறிவு ஆன்மீக வாதிகள்.

இவர்களை போன்று இக்காலத்திற்கு தேவையான மதக் கருத்துக்களை தற்கால பிரச்சினையுடன் தொடர்பு படுத்தி அதை தீர்க்க முயலுபவர்கள் தான் மதத்திற்கு தேவையானவர்கள்.

இவர்களால் தான் மதம் சீர்படும், மனிதம் மேம்படும்!!!

சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய மிஷ்கின் படத்தின் ஆரம்ப காட்சி இது... சாலையில் அடிபட்டு இருப்பவரை அந்த வ்ழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு நபர் படம் பிடிப்பார், ஏன் என்று அவர் நண்பர் கேட்கும் பொழுது Facebook-இல் போடலாம் மச்சி, நிறைய லைக் வரும் என்பார்.

இது போன்று தான் முன்பு ஆட்டோவிற்குள் இருக்கும் ஒருவரை சரமாரியாக வெட்டுவதை மொபைலில் எடுத்து You Tube-இல் விட்டனர்.இப்பொழுது புலி தூக்கி செல்லும் நபரை மொபைலில் எடுத்து Facebook-இல் பரவ விடுகின்றனர்.

இதற்கு தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அங்கு பதட்டமாக பரிதவிப்பவர்கள் எவ்வளவோ மேல்.

# தொழில் நுட்பமும், வளர்ச்சியும் மனிதர்களை உருவாக்கவில்லை மாறாக சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நில நடுக்கமும், இறை நடுக்கமும்!!!

கிட்டத்தட்ட 11 வது முறையாக( நேற்று மதியத்திலிருந்து) நில நடுக்கத்தை இன்று காலை வரை வரை உணர்ந்துள்ளோம். நில நடுக்கம் சார்ந்த சில பதிவுகளில் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

எனக்கு இந்த நிமிடம் வரை... கடவுளை இதற்காக பிரார்த்திக்க வேண்டும் என்று தோன்றவில்லை, இந்த எண்ணம் சில ஆத்திகர்களுக்கு கூட தோன்றியிருக்காது இதையெல்லாம் எவராலும் தடுக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மை அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு வேளை அந்த நடுக்கத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது என்னையும், என் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது, அதற்கான வழிகளை என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது என்பது மட்டுமே என் கண் முன்பு இருக்கிறது.

எப்படி பயம் சூழ்ந்த சூழ் நிலையிலும் உங்களால் கடவுளின் எண்ணம் வராமல் இருக்க 
முடிகிறது என்று சிலர் கேட்கிறார்கள். பய சூழ் நிலையில் மட்டும் தான் ஒருவருக்கு கடவுள் எண்ணம் வர வேண்டுமா??? அவர் அந்த சூழ் நிலையில் உனக்கு உதவினால் மட்டுமே நீ அவர் இருத்தலை உணர்வாயா ??? நம்புவாயா??? ஒரு வேளை உனக்கு உதவ வில்லையென்றால் அவரை நம்ப மாட்டாயா??? (இந்த கேள்விகள் எல்லாம் எந்த காலத்திலும் தொடர்பவை!)

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்....ஒரு வேளை பெரிய நடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று என்னுடன் Wallet மற்றும் Car Key-ஐ வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். என் மனைவியோ Passport மற்றும் மகனுக்கு தேவையான சில உணவுப் பொருட்களை அருகில் வைத்துக் கொண்டாள். என் மகனோ புதிதாக வாங்கிய சில விளையாட்டுப் பொருட்களை காண்பித்து இதை என்னுடன் கொண்டு வரட்டுமா என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தான்!!!

பிகெவும் பிசாசும்!!!

சமீபத்தில் நான் பார்த்த படங்கள் என்பதை தாண்டி சில ஒற்றுமைகள் இந்த படங்களுக்கு உண்டு.

முதலாவது கடவுள் சார்ந்த ஒன்று, இரண்டாவது சாத்தான் சார்ந்த ஒன்று.

முதலாவது கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, ஒருவேளை அப்படி ஒன்று இருந்து அதை நீங்கள் அணுக நினைத்தால் சரியான பாதையில் செல்லுங்கள் என்றது.
இரண்டாவது பிசாசு என்று ஒன்று இருக்கிறது என்று ஆராயவில்லை , ஒரு வேளை அப்படி ஒன்று இருந்தால் அதற்கும் கடவுள் தன்மை இருக்கலாம் என்றது.

முதலாவது கடவுள் தன்மை கொண்டதாக தன்னை சித்தரித்து உலா வருபவரின் அருவெறுப்பான முகத்தை காட்டியது. இரண்டாவது பிசாசு தன்மை கொண்ட ஒரு பெண்ணின் அழகிய முகத்தை காட்டியது.

முதலாவது மதம் மற்றும் போதகர்கள் இவற்றின் மாய, போலி வலையில் சிக்காமல் கடவுளை காண சொன்னது.இரண்டாவது பயம்,பீதி இவற்றிற்கு அப்பாற்பட்ட பிசாசை காண சொன்னது.

மொத்தத்தில் பிகெ.....பிசாசு என்கின்ற ஒன்று இருந்தால் அதன் ஒரு பக்கம்.
பிசாசு.....கடவுள் என்கின்ற ஒன்று இருந்தால் அதன் ஒரு பக்கம்.

Bye Bye America!!!

கிட்டத்தட்ட 3 வருடங்கள் 3 மாதங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து விடை பெறப் போகிறேன். அமெரிக்காவானாலும், அமைந்தகரையானாலும் ஒரு இடத்திலிருந்து சில நாட்கள் கழித்து நகர்ந்தால் ஒரு வெறுமை வரத்தான் செய்யும்...

இங்கு வந்ததற்கான நோக்கம் (கடன்) நிறைவேறினாலும், இங்கு வந்த பிறகு நான் ஆரம்பித்த சில விருப்பங்களை(தற்காப்பு கலை) முழுமையாக முடிக்காமல் கிளம்ப நேரிடுகிறதே என்கின்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

விசா சிக்கல் காரணமாக இந்த 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்பொழுது தான் சென்னை செல்லப் போகிறேன் என்கின்ற பொழுது வெறுமைகளும், வருத்தங்களும் சற்று மறையத்தான் செய்கிறது.

அமெரிக்கா எனக்கு கனவாகவோ , இலட்சியமாகவோ இருந்ததில்லை. 2009 பொருளாதார தேக்க நிலை காரணமாக அலுவலகத்தில் திட்ட பணிக்காக(Project Work) காத்திருந்த பொழுது அந்த திட்ட பணியும் கிடைத்து அதற்காக அமெரிக்காவும் செல்ல வேண்டும் என்ற பொழுது அந்த டீலிங் பிடித்து முதல் முறையாக 6 மாதம் இங்கு வந்தேன், அதற்கு பிறகு ஒன்றரை வருடம் கழித்து கடன் காரணமாக மறுமுறை நானே டீலிங் செய்து கொண்டு வந்தேன்!

அடுத்து இங்கு வரப் போகிறேனா இல்லையா என்பதை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் என்பதை விட , என் கையில் கொடுக்கப்பட்ட காலத்தை தீர்மானிக்க நான் பல விடயங்களை முன்னிறுத்தி சென்னை சென்ற பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த அமெரிக்கா பல மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் மூலமாக பல விடயங்களை , பல அனுபவங்களை கற்றுத்தந்திருக்கிறது.

என்னதான் இங்கு பல வருடங்கள் இருந்தாலும் நம் அடையாளத்துடன் , உதவி மனப்பான்மையுடன் இருக்க விரும்பும் மனிதர்கள், இங்கு வந்த சில நாட்களிலேயே நம் அடையாளத்தை மறைக்க நினைத்து மறைக்க முடியாமல் கொண்டையை வெளிக்காட்டும் மனிதர்கள். அமெரிக்கா தான் சொர்க்கம், அமெரிக்கா தான் உலகம் என்று இருக்கும் மனிதர்கள்.( இவர்களின் பார்வையில் நம் ஊர் ஒரு நரகம்!!!)

இவர்களாவது பரவாயில்லை... என்ன சார் கிளம்புறீங்களா... நான் இங்கு குடியுரிமையுடன் இருக்கிறேன், வந்து 25, 30 வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் குழந்தையை வேண்டுமானால் நான் தத்து எடுத்துக் கொள்ளட்டுமா என்று ஒருவர் கேட்டாரே பார்க்கலாம். அவர் மீது எனக்கு கோவம் வரவில்லை, பரிதாபம் தான் வந்தது. அவரின் மன நிலை என்ன.... அமெரிக்காவில் வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கிறாரா இல்லை பணம் இருப்பதால் எந்த உறவு முறையையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறாரா.... இவர்களை போன்றோரை அமெரிக்கா காப்பாற்றட்டும், இவர்களை போன்றோரிடமிருந்து அமெரிக்கா காப்பாற்றப்படட்டும்!!!

மத வா(வியா)திகளின் வேலை!!!

பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை. தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார்.

ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு விமானத்தில் செல்கிறோம். இது தான் பூமி என்று வைத்துக் கொள்வோம் என அந்த டம்ப்ளரை காண்பித்தார். பூமி ஒரு பக்கம் சுற்றுகிறது என்றால் விமானம் வானிலேயே நின்று கொண்டிருந்தால் கூட சீனா விமானத்தை நோக்கி வரும்.

பூமி மறுபக்கமாக சுற்றுகிறது என்றால் விமானம் சீனாவை அடையவே முடியாது. ஏனென்றால் சீனாவும் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா. அதனால் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி.

# அந்த காலத்திலிருந்தே நம்மை குழப்புவது தான் இந்த மத வா(வியா)திகளின் வேலை.
சாதாரணமாக பூமியோடு சேர்ந்து அதனை சார்ந்த வளி மண்டலமும் பூமி சுற்றும் வேகத்திலேயே சுற்றுகிறது. அதனால் தான் அந்த வளி மண்டலத்தோடு சேர்ந்து விமானமும் நகர்கிறது அதற்கான வேகத்தையும் கணக்கில் கொண்டு.இவையனைத்தும் ஒரு சேர இருப்பதால் தான் நம்மால் நாம் சேர விரும்பும் இடத்தை அடைய முடிகிறது. வளி மண்டலத்திற்கு மேலே இதே போல் இருப்பதில்லை ஏனென்றால் அங்கு வளி மண்டலமும் இல்லை, அதுவும் பூமியின் வேகத்தில் சுற்றாது மேலும் புவி ஈர்ப்பு விசையும் இல்லை.(பூமி தன்னை தானே சுற்றும் வேகம் கிட்டத்தட்ட 1040 mph , ஒரு விமானத்தின் சராசரி வேகம் 500 - 600 mph.)

நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு காலத்தில் பூமி இந்த வேகத்தில் சுற்றினால் நாம் விழுந்து விட மாட்டோமா, பூமி உருண்டை என்றால் அதன் அடி பாகத்தில் இருப்பவர்கள் ஏன் கீழே விழாமல் இருக்கிறார்கள் என்று புவி ஈர்ப்பு விசையை உள்வாங்காமல் நம்மை முட்டாளாக்கியது போல இன்றும் நம்மை முட்டாளாக்குவதற்கு மத வியாதிக் கூட்டம் தயாராக நின்று கொண்டிருக்கிறது!!!

புத்தர் தான் இன்னமும் நமக்கு தேவை படுகிறார்

என்னைப் பொறுத்தவரை ஏன் இயேசு மற்றும் நபியிலிருந்து புத்தர் வேறுபடுகிறார், தனியாக தெரிகிறார்.

புத்தர் தன்னை எப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாகவோ, கடவுளாகவோ வெளிப்படுத்தியதில்லை. தன்னை பின்பற்றுபவர்களையும் அவ்வண்ணமே தன்னை பார்க்கவும் செய்திருக்கிறார்.

புத்தர் என்னதான் சார்வாகர் மற்றும் மாதவாச்சாரியார் பரப்பிய சார்வாக(முதல் நாத்திக கோட்பாடு) தாக்கம் கொண்டிருந்தாலும், அந்த தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு அதே நேரம் சாதி, மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்து கடவுள் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு ஆன்மீக சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்திருக்கிறார்.

தண்ணீருக்காக இரத்தம் சிந்தாதீர்கள் என்று இன்றைய நிலையை அன்றே படம் பிடித்து காட்டியவர் புத்தர். வேள்விகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்கினங்கள் நேரடியாக சொர்க்கம் செல்லும் என்று பிராமணர்கள் கூறிய பொழுது அதை ஏன் நீங்கள் கடை பிடித்து சொர்க்கம் செல்லக் கூடாது என்று அன்றே கேள்வி கேட்டவர் புத்தர்.(மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் என்று பெயரிட்டதையும், நாத்திகம் பேசுபவர்கள் புத்தரை வழிபடுவதாகவும் அவர்களை இராமாயணத்தில் தாழ்மை படுத்துவதையும் இங்கு கருத்தில் கொள்க...)

நம் சமூகத்தில் தோன்றிய, நம் சமூகத்தை சீர்திருத்த முயன்ற, தனி மனித வாழ்க்கைக்கு ஏற்றம் தர முயன்ற(அதே சமயம் அந்த கருத்துக்கள் உலகம் முழுமைக்கும் பொருந்தியது.) ஒரு வேறுபட்ட / மாறுபட்ட மனிதர் புத்தர் என்கின்ற அளவில் முதலில் கூறிய அந்த இருவர்களை விட புத்தர் எனக்கு வித்தியாசமாக தெரிகிறார், புத்தர் தான் இன்னமும் நமக்கு தேவையும் படுகிறார்.

Bangalore Days!!!

காலை 6 30 - 7 மணி இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இறங்கினேன்.தங்கும் விடுதிக்கு வந்து அதற்கு பிறகு அலுவலகம் செல்ல வேண்டும் என்கின்ற அவசரத்தில் ஒரு பேருந்தில் ஏறினேன். 20 ரூ கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு மீதி சில்லறையை நடத்துனர் தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். 10 ரூ அல்லது அதற்கு குறைவாகத்தான் அந்த பயணத் தொகை இருந்திருக்க வேண்டும், நான் என்னவோ அவருக்கு நான் கொடுத்த கடன் தொகையை திருப்பி கேட்பது போல நடத்துனர் என்னை கண்டு கொள்ளவேயில்லை. அலைச்சலில் / அவசரத்தில் நானும் கேட்காமல் இறங்கி விட்டேன். இறங்கியதும் என் மனத்திற்குள் தோன்றியது இது தான்..."இந்த கன்னடக் காரங்களே இப்படி தான் போல"

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு...மற்றொரு பேருந்தில் 5ரூ பயணச்சீட்டிற்கு 10ரூ கொடுத்து விட்டு மறுபடியும் ஏமாறுவதற்கு காத்திருந்தேன், ஆனால் இந்த முறை மீதி சில்லறையை கேட்டு விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக அவரே வந்து 5ரூ சில்லறையை கொடுத்து விட்டு சென்றார்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இள நீர் கடையில் தண்ணியா கொடுங்க என்று ஒரு இள நீரை வாங்கி குடித்தேன், குடிக்கும் பொழுது தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததை உணர முடிந்தது... சரி என்று 25ரூ பணத்தை கொடுப்பதற்கு முன்பே அவர் மற்றொரு இள நீரை வெட்டி கொடுத்தார். எதற்காக.. என்று கேட்கும் முன்னரே அதுல தண்ணி கம்மியா இருந்துச்சு என்றார் கன்னட தமிழில்...எனக்கும் தெரிஞ்சது சொல்லலாம்னு நெனெச்சேன் என்றேன் தமிழ் கன்னடத்தில்...புன்னகை பரிமாற்றத்திற்கு நடுவில் 25ரூ பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.

இருவரும் கன்னடர்கள் தான். இந்த சாதிக்காரன் இப்படித்தான் இருப்பான், இந்த மதக்காரன் இப்படித்தான் இருப்பான் என்பது போலத்தானே இதுவும் ஒரு மூட நம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை. மனிதம் சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, இன/மொழிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உணர்வதற்கு தான் நம்மிடம் நேரமும் இல்லை மனமும் இல்லை!!!