Wednesday, February 13, 2013

இன்றைய அனுபவம் (26.1.2013) - பேசும் கலை

இன்றைய அனுபவம் என்னை 22 வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றது...

அடுத்தது நான் என்று நினைக்கும் பொழுது பயம் என்னை கவ்விக் கொண்டது,தொண்டை வறண்டிருந்தது,எத்தனை முறை எச்சில் விழுங்கியும் பயனில்லை,இதயத் துடிப்பு தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது.

என் பெயர். ஆமாம் என்னைத் தான் கூப்பிட்டார்கள். எழுந்து நடக்கும் பொழுது யாரோ முதுகில் ஏறி அமர்ந்தது போன்று ஒரு சுமை, முதுகிலிருந்து அப்படியே அந்த பாரம் மனத்துள் இறங்கியது.போய் நின்றது தான் தாமதம், அப்படியே கட கடவென நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு வந்து அமர்ந்தேன்.மூன்றாம் வகுப்பில் நான் பேசிய முதல் பேச்சுப்போட்டி அது. பேசிய தலைப்பு லால் பகதூர் சாஸ்திரி.அதை பேச்சு என்பதை விட என் அப்பா எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தேன் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்!


பேச்சுப் போட்டியில் என்னுடைய ஒப்புவித்தல் கலை இப்படித்தான் பல வருடங்களுக்கு தொடர்ந்தது, பரிசுகளும் கிடைத்தது, ஆனால் எனக்கு அதில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு... ஒன்று அப்பா அல்லது வேறு சிலரிடமிருந்து குறிப்பு எடுத்து நாம் சொந்தமாக பேசலாம் ஆனால் நானோ அப்பா எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசிக்கொண்டிருந்தேன், இன்னொன்று அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே மனனம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருந்தேன்.

ஒப்புவித்தல் ஒரு விதத்தில் பயனையும் தரும் பல சந்தர்ப்பத்தில் காலையும் வாறும்! நடுவில் ஒரு வார்த்தை மறந்துவிட்டால் கூட அதோ கதி தான், நீங்கள் அந்த மேடையில் அடுத்த வார்த்தை ஆயுதம் கிடைக்கா நிராயுதபாணி தான்.....அடுத்த வார்த்தைக்கு நம் மூளையிடம் யாசகம் கேட்கும் வறியவனாகும் நிலை நமக்குஏற்படும்.படபடப்பும்,பதைபதைப்பும் சேர்ந்து ஆளை ஒரு கை பார்த்துவிடும்! மீன் குழம்பு சாப்பிடும்பொழுது மீன் முள் தொண்டையில் சிக்கிய கதை தான்,முள் உள்ளேயும் போகாது, வெளியேயும் வராது. அந்த முள்ளை எடுக்காவிட்டால் நமக்கு நிம்மதியே இருக்காது, இது போல் வார்த்தை சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான், அடுத்த வார்த்தையும் கிடைக்காது, இதுவரை பேசியதும் நினைவுக்கு வராது. சிக்கிக் கொண்ட வார்த்தையையே மறுபடியும் மறுபடியும் பேசிக்கொண்டு திணறிக்கொண்டு இருப்போம். மிச்சமாயிருக்கும் நிமிடங்களை அமைதிக்கும் ,அடுத்தவர் சிரிப்புக்கும் காணிக்கையாக்கி மேடையிலிருந்து இறங்க வேண்டியது தான். பல சமயங்களில் இது போன்ற வார்த்தை முள்களால் திணறியிருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து என நினைக்கிறேன்,அப்பாவின் எழுத்தை மனனம் செய்யாமல் குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டு பேச முயற்சி செய்திருக்கிறேன்,

மேல் நிலை படிக்கும்பொழுது என் பள்ளியில் 50 ஆம் ஆண்டு சுதந்திர விழாவில் பேசுவதற்கான குறிப்பை சுபவீயிடமிருந்து பெற்ற பொழுது தான் பேசும் கலையின் அடுத்த பக்கத்தை அவரிடம் கண்டேன்.

=> குறிப்பெடுத்தல்.

=> தயார்படுத்திக் கொள்ளல்.

=> யதார்த்தமான பேச்சு.

=> மேற்கோள் மற்றும் ஆதாரத் தகவல்கள் இறுதியாக

=> பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கும் நம் பேச்சின் முதல் இரண்டு நிமிடங்கள்.

இன்றைக்கும் கூட சுபவீ மேற்கூறிய விடயங்களை அவரது பேச்சில் கடைபிடிப்பதை நாம் காணலாம்.



கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு ஒரு சிறு கூட்டத்தின் முன்பு மறுபடியும் பேசும் வாய்ப்பை பெற்றேன். என்ன தான் நாம் எழுதினாலும் ,தனி நபர்க்கு முன்பு பேசினாலும் கூட்டத்தின் முன்பு பேசுவது என்பது நிச்சயமாக ஒரு கலை தான்.

தாலஸ் தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் CHILD ஆதரவற்றோர் இல்ல கட்டுமானப் பணிக்கான நிதியை திரட்டுவதற்காக 15 நிமிடம் பேசும் வாய்ப்பை பெற்றேன். என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை முன் கூட்டியே யோசித்து வைத்திருந்தேன். பல வருடங்கள் கழித்து பேசுவதால் கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்தது. பேசுவதற்கு முன்பு என் மனத்தில் இருந்தது இது தான்...

* பேச்சின் ஆரம்பம் பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப வேண்டும்.

* CHILD ஆதரவற்றோர் இல்லம் பற்றி முழுமையாக சொல்ல வேண்டும்.

* பேச்சு யதார்த்தமாக இருக்க வேண்டும், நடுவில் தடை படக் கூடாது.

* பேச்சு முழுமையாக தமிழில் இருக்க வேண்டும், பிற மொழி கலப்பு இருக்கக் கூடாது. (வேண்டுமென்றால் மேஜர் சுந்தரராஜன் பாணியில் மிகவும் பரிச்சயமில்லாத தமிழ் வார்த்தைகளுக்கு உடனடியாக ஆங்கில மொழி பெயர்ப்பு கொடுக்கலாம் என நினைத்திருந்தேன்). நடைமுறை வாழ்வில் சரளமாக தமிழில் பேசுவதற்கு இது ஒரு முன்னோட்டமாக/வெள்ளோட்டமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

* முக்கியமாக என் பேச்சின் வெற்றி அவர்களின் கை தட்டலில் நான் காண்பதை விட, அவர்கள் மனமுவந்து கொடுக்கும் நன் கொடையில் நான் உணர வேண்டும்.

என் பேச்சை இப்படித்தான் ஆரம்பித்தேன்...

 -> "நான் இங்க புதுசா ஒண்ணும் சொல்ல வரலெ...

 எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் - இயேசு நாதர்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் - வடலூர் வள்ளலார்.

ஆண்டவரை உச்சரிக்கின்ற உதடுகளை விட அடுத்தவர்க்கு உதவுகின்ற கரங்கள் என்றும் மேலானவை - அன்னை தெரசா.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் - அறிஞர் அண்ணா

இவங்க சொன்னத, செய்ய சொன்னத தான் சொல்ல வந்திறுக்கேன், நமக்கு அத்தியாவசியத் தேவையானது உணவு,உடை,உறைவிடம்..இந்த அத்தியாவசியத் தேவைக்கே மத்தவங்க கிட்ட கையேந்துற நிலையில இருக்குற, நாம, நம்ம குடும்பம்னு போய்ட்டு இருக்குற நம்ம சராசரி வாழ்க்கைலெ இருந்து நம்ம கண்ணுக்கு புலப்படாம விலகி இருக்குற ஒரு 17 பேர பத்தி சொல்ல போறேன்...." <->
இதுவரை நாங்கள் அவர்களிடமிருந்து சேர்த்திருக்கும் தொகை 600$ க்கு மேல்... பேசுவது நிச்சயமாக ஒரு கலை தான் அப்பேச்சு நமக்கும்,பிறருக்கும் பயன்படும் பட்சத்தில்... அக்கலையை இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன் நான் பிறரிடம் பேசும்பொழுதும், பிறர் என்னிடம் பேசும்பொழுதும்.....

Sunday, February 3, 2013

இன்றைய அனுபவம் (12.1.2013) - மத போதனையும் மரண தண்டனையும்

23.1.1999.

1965 முதல் ஒரிசா மானிலம் மனோகர்பூரில் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58),அவரது மகன்கள் பிலிப்ஸ் (வயது 9)மற்றும் திமோத்தி (வயது 6)ஆகியோர் தங்கள் சேவைகளை முடித்து விட்டு இரவு நேரத்தில் ஜீப்பில் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கூட்டம் அவர்களை ஜீப்போடு கொளுத்தி தமது வெறியை தீர்த்துக் கொண்டது. தாங்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டோம் என்கின்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு,2004 வரை தொழு நோயாளிகளுக்கான பணியை தொடர்ந்து செய்து அதன் பிறகு தான் ஆஸ்திரேலியா திரும்பினார் ஸ்டெய்ன்ஸின் மனைவியான கிளேடியஸ் ஸ்டெயின்ஸ்.



இந்த குற்றத்திற்காக கீழ் நீதிமன்றம் பஜ்ரங்தள் கூட்டத்தலைவன் தாராசிங் மற்றும் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனை உய்ர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த விடயம் பற்றிய இருவரின் பேச்சு கவனிக்கத்தக்கது, ஒருவர் கிளேடியஸ் ஸ்டெயின்ஸ் மற்றொருவர் பஜ்ரங்தள் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின். முதலாமவரின் கருத்து மனித நேயத்தின் மணிமகுடமாக திகழ்ந்தது, இரண்டாமவரின் கருத்தோ மனித நேயத்தின் ஆணிவேரையே தகர்த்தது.

கிளேடியஸ் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து விடுதலை அளிக்க கோரினார். சுரேந்திர ஜெயினோ இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று நச்சை கக்கினார்.

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால் ஹிந்து அடிப்படைவாதிகளில் பலர் சுரேந்திர ஜெயினின் கருத்தையே பிரதிபலித்தார்கள். உண்மையான தொண்டூழியம் மற்றும் சேவையில் ஈடுபட்டவர்களை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இந்த சமூகம் சித்தரித்தது, அவர்களுக்கு இந்த தண்டனை அவசியம் என்று ஈவு இரக்கமின்றி அங்கீகரித்தது. அன்னை தெரசா போன்றவர்கள் எப்படி இந்த சமூகத்திலிருந்து தப்பித்தார்கள் என்று நினைத்து பார்க்க கூட முடியவில்லை. வியாபாரத்திற்காக நடத்தப்படும் கட்டாய மதமாற்றத்தை நாம் என்னாளும் அங்கீகரிக்கவில்லை அதே சமயம் உங்களின் மதம் அன்பையும்,சாதி பேதமற்ற சமத்துவத்தையும் போதிக்கும் பட்சத்தில் அந்த மதத்தை யார் வந்தாலும் அசைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை என்பதையும் நாம் மறுப்பதிற்கில்லை.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்...

12.1.2013.

சனிக்கிழமை காலை 11 மணி இருக்கலாம். வீட்டை தட்டும் கதவு சத்தம் கேட்டு திறந்தேன், என் வயதையொத்த இருவர் வாசலில் நின்று கொண்டிருந்தனர், பார்த்த மாத்திரத்திலேயே என்னால் அவர்களை வட ஹிந்தியர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவர்களை வரவேற்று அறிமுகம் செய்து கொண்ட பிறகு அவர்கள் வந்ததற்கான காரணத்தை கேட்டேன். என் கேள்விக்கான அவர்களின் பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

இந்த பகுதியில் ஹிந்தியர்கள் யாரென்று அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடிச் செல்வோம் என்றனர். சரி உங்களின் நோக்கம் என்ன, உங்களுக்கென்று அமைப்பென்று ஏதாவது இருக்கிறதா, அப்படி இருந்தால் அதன் மூலம் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று கேட்டேன்.

அப்படி எல்லாம் குறிப்பாக எதுவும் இல்லை என்றார்கள். என்ன தான் எங்கள் குடும்பம் மற்றும் தலைமுறை கிறித்துவ மதத்தில் இருந்தாலும் எனக்கு இந்த சாதி,மதம் மற்றும் கடவுள் போன்றவற்றில் ஈடுபாடு இல்லை எனவும்,அவர்களால் நமக்கு ஏதாவது பயன்,பலன் கிடைக்கட்டுமே என்கின்ற அடிப்படையில் நாங்கள் எங்களால் முடிந்த அளவு இந்த சமூகத்திற்கு செய்யும் சில விடயங்கள் பற்றியும் முக்கியமாக இப்பொழுது நாங்கள் பணம் திரட்டிக் கொண்டிருக்கும் CHILD இல்ல கட்டுமானப் பணி பற்றியும், எங்களின் இணையத்தளம் பற்றியும் நாங்கள் செய்யும் சில செயல்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யலாம் என்றும் கூறினேன்.

சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமலேயே அவர்களிடமிருந்து விடை பெற்றேன், பிறகு இங்கு அமெரிக்காவில் வெகு நாளாக இருக்கும் நண்பர் ஒருவரிடம் அவர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.என் நண்பரின் அளித்த விளக்கம் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

ஹிந்தியர்கள் மட்டுமல்லாது அவர்கள் அமெரிக்கர் வீட்டுக்கும் செல்வார்கள் என்றும், பகவத் கீதை பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் நேரடியான மத போதனை மற்றும் மத பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் , ஒரு வேளை என்னைப்பற்றி நான் தெளிவாக நான் அவர்களிடம் முன்பே தெரிவித்து விட்டமையால் என்னிடம் அவர்களின் நோக்கம் பற்றி சொல்லாமல் சென்றிருக்கக் கூடும் என்றும் அந்த நண்பர் என்னிடம் கூறினார்.

அவர்களை நான் சந்தித்த 2 வாரம் கழித்து ஸ்டெயின்ஸ் மற்றும் அவரின் மகன்கள் கொல்லப்பட்ட 14 ஆம் வருட நினைவு நாள் வந்தது.