Tuesday, March 17, 2009

யார் கடவுள்?

ஊன முற்றவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை,இடர்பாடுகளை காட்டிய பாலா,இந்து மத சாஸ்திரத்தில் அகோரிகளாக சொல்லப்படுபவர்களின் நோக்கங்களை,குறிக்கோள்களை அதன் உண்மைகளை(அது நியாயந்தானா மற்றும் பகுத்தறிவுக்கு உகந்தது தானா என்று)ஆராய்ந்து சொல்லாமல் விட்டுவிட்டார்.

ஜோசியத்தின் மேல் நம்பிக்கை கொண்டு மகனை காசியில் விட்டு விட்டுச் சென்ற தந்தையை காசிச் சாமியார் மூலம் சாடும் பாலா,பூசாரியிடம் இதுவரை பேசாத கடவுளா நம்மிடம் பேசிவிடப் போகிறது என்று பக்தனின் மூலம் சாடும் பாலா,வாய் பேசாமல்,காது கேட்காமல்,கண்ணை மூடிக் கொண்டிருக்கும் கடவுள் ஒரு கடவுளா என்று ஆர்யாவின் மூலம் சாடும் பாலா,சடை முடிஞ்சவன்லாம் சாமியா என்றும் நம்மள மாறி ஆளுங்கலுக்கு அந்த கடவுள் ஒரு தேவடியாபய்யன் என்று கதாபாத்திரங்கள் மூலமும் இறுதியாக உலகத்தை இரட்சிக்கப் பிறந்த இயேசு பிரான் எங்களை இரட்சிக்க வில்லையே என்றும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்ற அல்லாவிடம் நாங்கள் செய்த பாவம் என்னவென்று கேட்கும் பொழுதும்,எங்களை காக்க பிள்ளயார்,முருகன்,காளி யாரும் வரவில்லையே என்று ஆதங்கத்தை கொட்டும் பொழுதும் பகுத்தறிவு சிந்தனையை பரப்பிய பாலா எதை வைத்து அகோரி(ர)சாமியார்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று தான் புரியவில்லை.

நான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஆர்யா பூஜா அறிவுரை கூற வரும் பொழுது அவளை அடித்து விரட்டுவதும் கடவுள் செயலா என்று கேட்க தோன்றுகிறது.கஞ்சா அடிக்கும் சாமான்யனை அடித்து லாடம் கட்டும் சமுதாயம் சாமியார் கஞ்சா அடித்தால் மட்டும் காலில் விழுவது முரண்பாடாகத் தெரிகிறது(மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கவனிக்க...!?)மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை என்ற வசனம் மலையாளிகளை பெருமைப்படுத்தவா இல்லை மாட்டுக்கறி தின்னும் சமுதாயத்தின் கீழ்தட்டில் இருப்பவர்களாக சொல்லப்படுபவர்களை சிறுமைப்படுத்தவா என்பது தெரியவில்லை.நீதிபதி(உயர் வகுப்பினராய் பறைசாட்டப்பட்டிருக்கிற...) எங்கயா நீ படிச்சேனு காவல் துறை அதிகாரியை நக்கல் பண்வது,விசாரிக்கிறேனு அவர்(ஆர்யா) மேலெ கை லாம் வச்சிடாதேனு சொல்வது...மேற்கண்ட இரண்டு வசனங்களும் நிச்சயம் பார்ப்பவ(ன)ர்களை திருப்தி படுத்தியிருக்கும்.
என்னமோ தமிழ் நாட்டில் உள்ள சாமியார்கள் அயோக்கியர்கள் போலவும்,வட நாட்டில் இருந்து வந்து சமஸ்கிருதத்திலும்,கஞ்சாவிலும் பிதற்றும் சாமியார்கள் யோக்கியர்கள் போலவும் காண்பிப்பதும் ஏற்றுக் கொள்வதாக இல்லை(எல்லா சாமியார்களும் அயோக்கியர்கள் என்பது வேறு விடயம்).

வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்.வாழ வழியில்லாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்.இது தான் படத்தின் மையக்கருத்தாக சொல்லப்படுகிறது...

இதன் மூலம் என்னுள் எழுந்த சில வினாக்களை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.....

வாழ வழியிலாதவர்களை கொன்று விடுவது தான் பாலா சொல்லும் தீர்வு என்றால் அது எத்தனை முட்டாள்தனமானது.சமுதாயத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில பிரிவு மக்களும், நாம் கடந்து செல்லும் பாதையில் நமக்கு தென்படும் சிலரும் சராசரி மனிதர்கள் போல் வாழவழியில்லாதவர்களாய்,வாழ்க்கையின் பெரும் பகுதி கஷ்டப் படுபவர்களாய் தான் இருப்பார்கள்.அவர்களுக்காகப் போராடி அவர்களின் நியாயத்தை பெற்றுத்தந்து குறைந்த பட்சம் வாழ்க்கையின் மீதிப் பகுதியில் அவர்களின் நிம்மதிக்காக,அவர்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்காக போராடுபவனே உண்மையில் சமூக புரட்சியாளன்,மனிதன்.அதை விடுத்து அவர்கள் அனைவரையும் காசியில் கஞ்சா அடித்துக் கொண்டு,சமஸ்கிருதத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் அகோரிச் சாமியார்களை அழைத்து வந்து குறைந்தபட்சம் இவர்கள் அடுத்த பிறவியாவது இல்லாமல் இருக்கட்டும்,அனைவரையும் கொன்று விடுங்கள் என்று நாம் முடிவு எடுத்தால் அது எப்பேற்பட்ட முட்டாள்தனமாக,அறிவிலித்தனமாக இருக்கும் என்பதை சாதாரணமாக சிந்தனை உள்ளவர்கள் கூட உணர முடியுமே...

ஏழு பிறவியை படைத்த கடவுள்,ஒரு பிறவியில் மனிதன் செய்த நன்மை,தீமைகளுக்கேற்ப அடுத்த பிறவியில் அவன் நல்லவனாகவோ இல்லை தீயவனாகவோ பிறப்பான்,அது ஏழு பிறவியிலும் தொடரும் என்று இந்து மத புராணம் சொல்கிறது.அப்படி இருக்கையில் இடைச்செருகளாக இந்த பிறவியில் வாழ வழியில்லாதவர்களை அகோரிச் சாமியார்கள் கொன்று விடுவதாக கூறுவது முரண்பாடாக தெரிகிறதே.....மேலும் அவனவன் செய்த நன்மை தீமைகளை அந்தந்த பிறவியிலேயே மக்கள் அனுபவிக்கும்படி கடவுள் செய்வதாக இந்து மத புராணம் சொல்வதாகவும் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் சொல்கிறார்.பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடிப்பதன் மூலம் பரிகாரம் கிடைத்து விடும்(அடுத்த பிறவிக்கு பாவத்தின் பலன் கொண்டு செல்லப்படாது) என்றும் சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனையே தீர்வு என்றும்(அடுத்த பிறவிக்கும் பாவத்தின் பலன் கொண்டு செல்லப்படும்) இந்து மத ஆதி வேதமான மனுதர்மம் சொல்கிறது.ஒவ்வொரு கால கட்டத்திலும் அவரவர் வசதிக்கேற்றபடி எழுதிச் சென்ற இவைகளில் எதை நம்புவது?சரி..... நான் தான் கடவுள்,பிரம்மா தான் அகோரிச் சாமியார் வடிவத்தில் இந்தச் செயலை செய்வதாக எடுத்துக் கொண்டால்,முற் பிறவியில் செய்த பாவத்தின் பலனாகத்தானே இப்பிறவியில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்,இப்பிறவியில் செய்கின்ற நன்மை,தீமைகளுக்கேற்ற பிரதிபலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பது தானே முறை.அதை விடுத்து வாழ வழியில்லாதவர்களை கொன்று அடுத்த பிறவியை தடுப்பது எப்படி நியாயமாகும்,தர்மமாகும்?மேலும் ஏழு பிறவியிலும் கடவுள் மனிதனை வழி நடத்துவதாக,அவனின் நன்மை,தீமைகளுக்கு கடவுளே காரண கர்த்தாவாக இருப்பதாகவும் இந்து மதம் சொல்கிறது.அப்படி இருக்கையில் ஏன் ஒருவனை தீமை செய்பவனாக படைத்து அதற்குரிய தீமையின் பலனை அடுத்த பிறவியில் அவனை அனுபவிப்பதற்கு அந்தக் கடவுளே அவனை நிர்பந்திக்க வேண்டும்?மேலும் அவன் தீமையின் பலனை அனுபவிக்கும்போது அவன் வாழ வழியற்றவன் என்று கூறி,அவனை கொன்று விட்டால் அடுத்த பிறவியை தடுத்து விடலாம் என்று அந்த கடவுளே(அகோரிகளை வழி நடத்தும் கடவுள் இல்லை அகோரிகளான அந்தக் கடவுள்) ஏன் முடிவு செய்ய வேண்டும்?வாழ்வில் சுவாரசியம் வேண்டும் என்பதற்காக ஒருவனை நல்லவனாக படைத்து நன்மையின் பலனை அடுத்த பிறவியிலும்,கெட்டவனாக இன்னொருவனை படைத்து தீமையின் பலனை அவனின் அடுத்த பிறவியிலும் அனுபவிப்பதாக அவனை நிர்பந்திப்பது கடவுளின் ஓர வஞ்சனை ஆகாதா?இது தான் நேர்மையான கடவுள் செயலா?இது தான் கடவுளா?

மொத்தத்தில் யார் உண்மையான,சக்தி வாய்ந்த கடவுள் என்ற காலம் போய் அனைத்து கடவுளும் இல்லை,எந்த சாமியாரும் இல்லை,முட்டாள்தனமான,அ நியாயமாக,பகுத்தறிவுக்கு ஒத்து வராத,மனு தர்மத்திற்கு தூபம் போட்டு தீர்ப்பு வழங்கும் அகோரி(ர)சாமியார்கள் தான் உண்மை என்பதை சொல்லாமல் சொல்கிறது படம்.கடவுளர்களுக்கு இடையேயான போட்டி ஆபத்து என்றால்,சாமிகளுக்கிடையேயான இந்த போட்டி பேராபத்து என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இறுதியாக ஓன்றை உறுதியாக சொல்வோம் யாரும் கடவுளுமில்லை,எவரும் சாமியாருமில்லை!

Friday, March 13, 2009

முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக...

உங்களின் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக உங்களை தண்டிப்பது,பிழை சொல்வது என்பது தவறு தான்.ஆனால் அந்த குற்றங்கள் இன்றும் அரங்கேறுவதால்,அதற்கு இன்றும் நீங்கள் தூபம் போடுவதால் தான் அதை எதிர்க்க,கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

மொத்தத்தில் நாங்கள் முந்தைய பார்ப்பனர்களுக்கும் எதிரிகள் அல்ல,இன்றைய பார்ப்பனர்களுக்கும் எதிரிகள் அல்ல.முந்தைய பார்ப்பனீயத்துக்கும்,அதை வழி தொட்டு, நிலை நிலை நிறுத்தி,கடைபிடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பார்ப்பனீயத்துக்கும் எதிரிகள் அவ்வளவு தான்.

சுதந்திரமான(!) 50 வது ஆண்டு பொன்விழா கொண்டாடிய அதே நேரத்தில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு கோயிலிற்குள் அதுலா தேவி என்ற கீழ் சாதி என்று உங்களால் சொல்லப்பட்ட பெண்ணையும் அவர் கணவனையும் தீட்டு பட்டதெனக் கூறி மேலாதிக்க வர்க்கம் எரித்துக் கொன்றதே....அது எந்த காலத்தில் நடந்தது?

தேவதாசி முறை மூலம் விபச்சாரத்தை பரப்பிய பூரி ஜெகன்னாதர் கொயிலில் கடைசி தேவதாசியான சசிமணி தேவிக்கு(வயது 85)வயதானதால் சிறு வயது பெண்ணை அடுத்த தேவதாசிக்காக தேடிக்கொண்டிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தின் பேடித்தனம் இந்த காலத்திலும் தானே தொடர்ந்து கொண்டிருக்கிறது..!

கே.ஆர். நாராயணன் உங்களால் வகுக்கப்பட்ட கோட்பாட்டின் படி சூத்திரன் என்பதாலேயே வெங்கட்ராமன் வரை கொடுத்து வந்த சிவப்புக் கம்பள விரிப்பு வரவேற்பை கே.ஆர். நாராயணன் மற்றும் அவர்களுக்குப் பிறகு எவருக்கும் கிடையாது என்று கூறினாற்களே காஞ்சி சங்கர மடத்தில் அது எப்பொது நடந்தேறியது?முந்தைய காலத்திலா....?

இன்றைய கால கட்டத்திலும் தீண்டாமையால் திறக்கப்படாத கோயில்கள் எத்தனை மற்றும் இராம நாதபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் எத்தனை தேனீர் கடைகளில் இரட்டை குவளை முறைகள் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?

இவையெல்லாம் இன்றைய காலத்திலும் தானே நடந்து கொண்டிருக்கிறது...இன்றைய கால கட்டத்திலும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மக்களும்,எம் மக்களை கருவறைக்குள் தடுக்கும் கோயில்களும்,தமிழை நீச பாஷை என்று சொல்லும் சிதம்பரம் தீட்சிதர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்....!?

கீழ் வெண்மணியில் வாய் திறந்து பேசியது உங்களால் சூத்திரப் பட்டம் கட்டப்பட்ட எம் மக்களாக இருந்ததால் தானே இன்றைய கால கட்டத்திலும் அவர்கள் எரித்துக் கொல்லப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்!

வட நாட்டில் இன்றளவும்,தென் நாட்டில் சில இடங்களிலும்(பெரியாரின் காரணமாக நிகழ்வுகள் குறைந்திருக்கின்றன,பகுத்தறிவு நிறைந்திருக்கின்றன)சாதீய,தீண்டாமை வன் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை உங்களால் மறுக்க,மறைக்க முடியுமா?

தட்டினால் திறக்கப்படும் மற்றும் கேட்டால் கொடுக்கப்படும் என்பது மட்டும் அல்ல தானாகவெ திறக்கும்,கொடுக்கும்(அது தான் சங்கரராமன் விடயத்தில் தட்டி...கொடுத்தார்களே!!!) என்று சேகரால்(சிரிப்பு நடிகர்!?)சான்றிதழ் வழங்கப்பட்ட சங்கர மடத்தின் மடாதி பதியாக ஒரு கீழ் சாதியைச்(உங்களால் வகுக்கப்பட்ட கொள்கைப்படி...) சேர்ந்த ஒருவரை நியமிக்கட்டும்,அவ்விதம் செய்தால், நாங்கள் அனைவரும் உங்களால் கண்டு பிடிக்கப்பட்ட உங்களின் கோயிலிற்கு வருவதோடு மட்டுமல்லாமல்,உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட உங்கள் சாமியையும் கும்பிடுகிறோம் அங்கு நாங்கள் சமமாக நடத்தப்பட்டால்.....