Wednesday, July 15, 2015

குமரிக்கண்டமா சுமேரியமா - 1

ஆதி தமிழர்கள் தமிழ் பரப்பிற்கு குடி பெயர்ந்து பரவியவர்கள் என்று பயணிக்கிறது பா. பிரபாகரன் எழுதிய குமரிக்கண்டமா சுமேரியமா புத்தகம்.
இதை சாதாரணமாக படிக்கும் தமிழர்களின் இரத்தம் கொதிக்கலாம், பிரபாகரனையும், இப்படி பதியும் என்னையும் வந்தேறி எனலாம். உங்கள் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வைத்து விட்டு ஆய்வு கட்டுரைக்கு இணையாக இருக்கும் இந்த புத்தகத்தை படியுங்கள், நிச்சயம் நீங்கள் அறிவு வயப்படுவீர்கள், ஆராயத் தொடங்குவீர்கள்.
...
இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்சீனியர், ஒரு அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நபர் தமிழ் சார்ந்த ஆய்வில் இறங்கும் பொழுது அந்த ஆய்வு முயற்சி ஒரு குறுகிய இடத்தில் சுற்றிக் கொண்டிருக்காமல் விசாலமாகும் என்பதற்கு இப்புத்தகம் உதாரணம்.
8 பகுதிகள் அடங்கியிருக்கும் இப்புத்தகத்தில் முதல் பகுதி தமிழர்கள் யார் என்று இருக்கிறது. வரலாறு, அறிவியல்,புவியியல் ஆய்வு என்று விளக்குகிறது/விரிகிறது.

அவரின் வாதம் இது தான் தமிழர்களின் வரலாற்று சின்னங்களாக நாம் பெருமைப்படும் அனைத்தும் மாமல்லபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் உட்பட. இவை அனைத்தும் நமக்கு கிடைப்பது பொது யுகம் என்று கருதப்படும் கி.பி-யில் தான். சுமேரியர்கள், எகிப்தியர்கள், சீனர்கள் உட்பட நமக்கு புலப்படும் அனைத்து பழங் குடியினர்கள் பொது யுகத்திற்கு முன்பே தமது வரலாற்று சின்னங்களை நிறுவியிருக்க, முன் தோன்றிய மூத்த தமிழ் குடியின் வரலாற்று சின்னம் என்று பொ.யு.முன்பாக 500 இல் கட்டப்பட்டது என்று ஒன்றும் இல்லை என்பது ஏமாற்றமாகவும், நெருடலாகவும் இருப்பதாக ஆசிரியர் கூறும் பொழுது நமக்கும் அதே உணர்வே மிஞ்சுகிறது.

இல்லை அவை அனைத்தும் குமரிக்கண்டம் அல்லது லெமூரியாவில் மூழ்கி இருக்கும் என்கின்ற எதிர்வாதத்தை புவியியல் கோட்பாடு ஏற்கனவே மறுத்து விட்டதையும் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்.

அப்படி என்றால்... தமிழர்கள் யார்? எங்கிருந்து பரவியவர்கள்.... தேடுதல் தொடரும்!!! (2 ஆம் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன், என்ன தான் கூறுகிறார் என்று பார்ப்போம்)

No comments: