Friday, October 19, 2012

அணு உலை - அழிவா இல்லை அரணா???

அணு உலையை ஆதரிப்பது, எதிர்ப்பது என்கின்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணு உலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சில அரசியல் கட்சிகள் மற்றும் சில முக நூல் நண்பர்கள் மட்டுமே அணு உலை பற்றி ஆராய்ந்து அதை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் நிலையை எட...ுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும், ஆதரிக்கும் கட்சியின் நிலையை சார்ந்தே, தங்களுக்கு பிடித்தமான கட்சியின் நிலைப்பாட்டை மையமாக வைத்தே முடிவெடுக்கிறார்கள்.


அணு உலை மின்சாரத் தேவை என்பது சரியா?????

உண்மை தான் ஆனால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணு உலை மூலம் நாம் பெறும் மின்சாரம் வெறும் 3 சதவீதம் மட்டுமே...மேலும் இந்த அணு உலைகள் மூலம் 40 வருடங்கள் மட்டுமே மின்சாரம் பெற முடியும் ஆனால் அவைகள் வெளியிடும் கதிரியக்கமோ 48,00,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும்,இந்த உலைகள் மின்சாரத் தயாரிப்போடு மட்டும் தொடர்புடையது அல்ல,அணு ஆயுதத்தயாரிப்போடும் தொடர்புடையது.

அணு உலை விபத்தை பிற விபத்துக்களோடு தொடர்புபடுத்துவதோடு சரியா?????

இந்த நாகரிக உலகில் அணு உலை பற்றின பயம் தேவையில்லாதது என்கின்ற கூற்றும் பரவலாக இருக்கிறது. முன்பு மகிழுந்துவை பயன்படுத்த தயங்கினோம், ரயிலை பயன்படுத்த தயங்கினோம் மற்றும் வானூர்தியை பயன்படுத்த தயங்கினோம் ஆனால் இப்பொழுது அனைத்தும் பழக்கமாகிவிட்டது, பயன்பாட்டிற்கு வந்து விட்டது அதை போலத்தான் அணு உலையும் என்கின்ற வாதம் வாதத்திற்கு மட்டுமே பொருந்துவதாகும்.எந்த விபத்தும் அணு உலை விபத்தை போல் தலைமுறையை பாதிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது என்பதும், அணு உலை பயன்பாட்டில் இருக்கும்பொழுதே கதிரியக்கத் கழிவுகளை வெளிப்படுத்தும் என்பதும் மறைக்க/மறுக்க முடியாத உண்மையாகும்,மேலும் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்காக ஏற்படும் விபத்துக்களோடு இலட்சக்கணக்கில் விபத்துக்களை ஏற்படும் , தலைமுறை தலைமுறையை பாதிக்கும் அணு உலை விபத்துக்களோடு தொடர்பு படுத்துவதும் அறியாமையே...

கூடங்குள அணு உலை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்கின்ற கூற்று உண்மையா?????

எந்தவித நவீன தொழில் நுட்பத்தை கையாண்டிருந்தாலும் விபத்து என்று வருகின்ற பொழுது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும்,அணு உலைகள் வெளியிடும் கதிரியக்க கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே.(கதிரியக்கத்தால் வெளிப்படும் கதிர்வீச்சு கதிரியக்க மாசுவிற்கு காரணம் என்று தமிழக அரசின் இணையத்தளத்தில் இருப்பதையும், கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் பொழுது நொடிக்கு 130,000,000,000,000,000 கதிர்வீச்சி துகள்களை வெளிப்படுத்தும் என்கின்ற அய். நா. அறிவியல் குழுவின் அறிக்கையும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் அணு உலை விபத்து காப்பீடு சட்டம் - 2010, சுனாமி, ஆயுத தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் அணு உலையில் நடக்கும் விபத்துக்களுக்கு எந்த விதத்திலும் அணு உலை நிர்வாகம் பொறுப்பாகாது என்று கூறியிருப்பது என் அப்பா குதிருக்குள் இல்லை என்று கூறுவதை போல் தான் உள்ளது) மேலும் நவீன தொழில் நுட்பத்தில் செர்னோபிலில் கட்டமைத்த அணு உலை 1986-லும், புகுஷிமாவில் கட்டமைத்த அணு உலை 2011-லும் விபத்துக்குள்ளான நிகழ்வும் இங்கு கவனிக்கத்தக்கது.

சூரிய மின்சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலுமா?????

இப்பொழுது ஒரு பரவலான கருத்து நிலவுகிறது, சூரிய மின் சக்தியின் மூலம் மின் தேவையை நிறைவு செய்து கொள்ள செலவு அதிகமாகும் என்பது, இது ஒரு விதத்தில் உண்மை என்றாலும் அந்த செலவும் கூட நிலத்தை ஆக்கிரமிப்பதால் ஏற்படுவதே ஆகும், அரசாங்கம் சிறிது சிறிதாக இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அணுமின் உலையின் தேவையே எதிர்காலத்தில் இருக்காது. பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கூறும் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் வசதி படைத்த அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காத தனியார் நிறுவனங்களும் தங்களுக்கான மின் தேவையை சூரிய சக்தி மூலம் நிறைவு செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு திருவண்ணாமலையிலுள்ள ஒரு பள்ளியும், பெரியார் - நாகம்மை பல்கலைகழகமும் சூரிய சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments: