Friday, August 30, 2013

அவனை மறுபடியும் பார்ப்பேன் என்கின்ற சிந்தனையில், ஏக்கத்தில்..... நானும், அவனின் நினைவுகளும்.

படித்தவர்களை பற்றி எழுதுவதை விட நாம் பழகியவர்களை பற்றி எழுதுவது சுவாரசியமானது மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையானதும் கூட...

எனக்கும் அவனுக்குமான அறிமுகம் ஆறாவது வகுப்பில் ஏற்பட்டது. அவனின் சுருட்டை முடியும், துரு துரு நடையும் என்னை வெகுவாக கவர்ந்தது.கணக்கு பாடத்தில் எனக்கு கிலி ஏற்படுத்திய புலி அவன்..

மிகவும் ஏழ்மையான குடும்பம். 2 தம்பிகள்... அப்பா ஒரு தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளி. வகுப்பில் ஒவ்வொரு முறையும் உன் பெயர் என்ன, அப்பா என்ன செய்கிறார் என்று ஆசிரியர்கள் கேட்கும் பொழுது, அவன் முறை வரும் போதெல்லாம் என் மனம் வலிக்கும்...சில மாணவர்கள் சிரிப்பார்கள்...அந்த சமயத்தில் அவன் முகத்தை பார்த்திருக்கிறேன், எந்த விதமான சலனமும், சோகமும் இருக்காது , எப்பொழுதும் போல மெல்லிய புன்னகையுடன் இருப்பான்...மதியம் சத்துணவு வாங்குவதற்காக செல்லும் பொழுது கூட அவன் பிறரைப் போல தன்னை மறைத்து சென்றதில்லை, அவனின் துணிவும், நம்பிக்கையும் என்னை வசீகரித்தது. பல முறை என் மதிய உணவை இருவரும் பகிர்ந்து அவன் வாங்கும் சத்துணவை நானும் ருசித்திருக்கிறேன்... அவனின் மகிழ்ச்சியை ரசித்திருக்கிறேன்,

அவன் வீட்டிற்கு அடிக்கடி சென்று உணவருந்தும் நேரத்திலும்... அவன் என் வீட்டிற்கு வந்து உணவருந்தும் நேரத்திலும் எங்களை மறந்திருக்கிறோம்.

நாங்கள் பழகிய ஆரம்பத்திலிருந்து பகிர்ந்து கொண்டது எங்கள் நட்பை மட்டுமல்ல கேவலமாக கிறுக்கி தள்ளும் எங்கள் கதை, கவிதைகளையும் தான்...என் கிறுக்கல்களை அவன் பாராட்டும் அழகு இருக்கிறதே...
ஆறாம் வகுப்பில் காதலும், கவிதையும் தெரியாத அந்த வயதில் கவிதை போல நான் கிறுக்கிய ஒரு காதல் கவிதையை வகுப்பாசிரியையிடம் காண்பித்ததும் அவன் தான்....அதை கூட கவிதை என அங்கீகரித்த என் எழுத்தின் முதல் ரசிகனும் அவன் தான்!!!

என்னை விட 2 வயது மூத்தவனான அவனுக்கும் எனக்கும் தான் 10 ஆம் வகுப்பு வரை வகுப்பில் முதல் 2 இடங்களுக்கு போட்டியும் கொஞ்சம் பொறாமையுமாக இருந்தது! (ஆமாம் எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு வகுப்பு தேர்வில் நான் முதலாம் மாணவனாக வந்த பொழுது, எதேச்சையாக ஒரு பாடத்தில் மதிப்பெண் திருத்தம் செய்து முதல் இடத்திற்கு அவன் சென்றதை நினைத்து அவனிடம் 2 வருடம் பேசவேயில்லை!?)

பத்தால் வகுப்பில் தான் மறுமுறை பேசினோம். அடுத்து நான் உயர் நிலை கல்வியில், அவனோ தொழில் நுட்ப பயிலகத்தில் வேதியியல் தொழில் நுட்பத்தில்...காலங்கள் கண்மூடித்தனமாக கரைந்தோடியது, அதில் அவன் நினைவுகளும் மறைந்தோடியது.

மறுபடியும் பார்த்தேன்...அவன் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையில் இருப்பதாக கூறினான்... முன்பு போல இல்லாவிட்டாலும் மறுபடியும் எங்கள் நட்பு மறுபடியும் முலை விட்டது. கல்லூரியில் அவன் ஆராய்ந்து செய்த ஒரு செய்முறை ஆராய்ச்சியை ஓரு தொழிற் சாலைக்கு கொடுக்க சென்று அவர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக கூறி வருத்தப்பட்டான். அப்பொழுது எனக்கு தோணவில்லை அவர்கள் செய்த அதே வேலையை இவனும் பிற்காலத்தில் செய்ய முற்படுவான் என்று!!!

பணம் சம்பாதிப்பது மட்டுமே அவனின் மனத்தில் அப்போது ஓடிக் கொண்டிருந்தது... நியாயமாக இருந்தால் ஏமாற்றப்படுகிறோம் என்கின்ற ஒரு அனுபவத்தை வைத்து அவனின் வாழ்க்கைப் பாதையை இப்படி மாற்றிக் கொள்வான் என்று நான் நினைக்கவில்லை.

ஆம். இத்தனை பேரை பிடித்தால் நமக்கு இவ்வளவு பணம் வரும் என்கின்ற தொழில் முறையில் அவன் அகப்பட்டிருந்தான்... நானும் என் நண்பர்களும் அவனுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் அதை கேட்கும் மன நிலையில் அவன் இல்லை. சம்பாதித்தான்... பிறகு  தனியாக அதே போல் தொழில் தொடங்கி பணம் திருப்பி தர முடியாமல் இறுதியாக காவல் துறை மூலம் தன் முகத்தை தொலைக்காட்சிக்கும் அவன் பற்றிய செய்திகளை பத்திரிகைக்கும் தரும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

அவன் கட்டிக் கொண்டிருந்த வீடு மட்டுமல்ல அவனும் முடக்கப்பட்டான். சிறிது காலம் கழித்து வெளியே வந்து விட்டான் எனவும், மொட்டை அடித்துக் கொண்டு தன் உருவத்தை மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன்.

சந்தர்ப்பம் , சூழ் நிலை அவனின் வாழ்வை முற்றிலும் மாற்றி விட்டது. பேராசை பெரு நட்டமாக முடிந்து விட்டது. அவனை போன்ற ஒரு அறிவாளியை  என் வாழ்வில் நான் கண்டு பழகியதில்லைஅவனை போன்று வாழ்வை தொலைத்தவர்களையும் என் வாழ்வில் நான் கடந்ததில்லை.

அவனை மறுபடியும் பார்ப்பேன் என்கின்ற சிந்தனையில், ஏக்கத்தில்..... நானும், அவனின் நினைவுகளும்.

No comments: