Sunday, September 9, 2012

வாழ்வின் அர்த்தம் என்ன?????


இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முடியாமலும், பதில் தெரியாமலும் 100 க்கு 98 சதவீத பிணங்கள் மயானத்திலும்,கல்லறையிலும் தினம் தினம் நிம்மதியில்லாமல் செத்துக்கொண்டிருக்கின்றன!!!


இந்த கேள்வியைப் பற்றி கவலைபடாமலும்..., இதற்கு பதில் தேடியும் பல நடைபிணங்கள் நம்மிடையே அனுதினம் உலாவிக்கொண்டிருக்கின்றன... நானாகவும், நீங்களாகவும்!!!


இதற்கான பதில் நம் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் அனுபவத்திற்கும், வயதிற்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்திருக்கும்.


நான் ஆறாவது வகுப்பு படிக்கையில் என்னைவிட ஒரு வயது மூத்த இளங்குமரன் தமிழ் பேச்சுப்போட்டியில் தனக்கே உரித்தான பாணியில் உச்சரிப்பையும், கருத்துச் செறிவையும் அள்ளி வீசும்பொழுது, தள்ளி நின்று ரசித்து அவனைபோல பேசி இந்த பார் ஏட்டிடம் பாராட்டை வாங்கிவிட வேண்டுமென்பது வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


மாடு மேய்க்கதான் போகனும்,பிச்ச தான் எடுக்கனும் நல்ல மார்க் எடுக்கலைனா... என்று அப்பா அடிக்கடி வயிற்றில் புளியை(புளி மட்டுமா...மிளகு,கடுகு என்று அனைத்தையும் தான்!) கரைக்கும்பொழுது,எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து விட வேண்டுமே என்பது பத்தாம் வகுப்பு படிக்கையில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


டேய் ஒரு 100 ரூவா உன்னால ரெடி பண்ண முடியாதாடா... என்று மதுபானக்கடையில் அமர்ந்து கொண்டு, இங்க பாருங்கடா இனிமே மாசத்துல ஒரு தடவையாவது கண்டிப்பா தண்ணி அடிக்கனும். சரக்கு, சைடிஷுக்கெல்லாம் சேத்து 100 ரூவா போதும்,எப்படியாவது ரெடி பண்ணிடுங்க என்று பள்ளித்தோழர்களிடம் வியாக்கியானம் பேசி வரையறையை முடிவு செய்தது அந்த நேரத்தில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


முதல் முறையாக கல்லூரியில் இடம்...முதல் காதல்...முதல் வேலை...திருமணம்...முதல் வெளி நாட்டு பயணம் இப்படியாக அனைத்து முதலுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வாழ்வின் அர்த்தத்ததிற்கான பதிலாகவும் அந்தந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.


இதற்கு அப்பாற்பட்டு சிறு வயதிலிருந்து நான் சந்தித்த சில விடயங்கள், நபர்கள் என் கவனத்தை இப்பொழுது அதன் பக்கம் ஈர்க்க வைக்கிறது.....சற்றே கவனத்தை சிதற வைக்கிறது.


வாரம் ஒரு முறை தவறாமல் வீட்டு வாசலில் கை ஏந்தி நிற்கும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்.


பசியின் கொடுமையால் தன்மானத்தை மறந்து தன் மானத்தை மறைக்க ஏதும் இல்லாது என்னை கும்பிட்ட வறியவர்.


வெயிலில் நடந்தாலே நொந்து போகும் நமக்கு மத்தியில் உடல் வெந்து போனாலும் தார் சாலையில் படுத்துறங்கும் பெரியவர்.


வேலை, வேலை என்று அலைந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து மேல் சொத்து சேர்த்து , மூன்று வேலையும் நன்றாக உண்டு அதில் சிறிது உடலுக்குள் சேர்த்து,கழிவை வெளித்தள்ளியே காலம் தள்ளும் நமக்கு இதை பற்றிய சிந்தனை,செயலெல்லாம் மிகவும் அரிதென்பதை என்னவென்று சொல்ல.


என்ன தான் நல்ல வேலை கிடைத்ததும் சில சமுதாய சேவையில் நேரத்தையும் , சிந்தனையையும், செயலையும் நான் செலவழித்தாலும் காலம் போகிற போக்கில் சுய நல புதை குழிக்குள் சிக்கி பழகிக்கொண்ட இந்த மூளை கடிவாளம் போட்ட குதிரையாகவும் , கீ கொடுத்த எந்திரமாகவும் பயணிப்பதிலேயே வழக்கமாகக் கொண்டு விட்டது.


இந்த நேரத்தில் தான் எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலருக்கு இவர் கடவுள். வேறு பலருக்கோ இவர் பிழைக்க தெரியாதவர்,முட்டாள்,பைத்தியம்...இவருக்கு முன்பு நாம் ஒன்றுமில்லை ஆனால் இது போல் ஏதாவது ஒன்றை நம்மால் முடிந்த அளவிலாவது நாம் செய்யாமலிருந்தால் நம் வாழ்விற்கு அர்த்தமுமில்லை... இப்படியாக வாழ்வின் அர்த்தம் தேடிக்கொண்டும், தேடிய அர்த்தம் கிடைத்தாலும் அதில் முழுமையாக ஈடுபடாத குற்ற உணர்ச்சி கொண்ட மனத்துடன் பயணிக்கும் உங்களுடன் சேர்ந்த நானும், என் மூளையும்!!!!!!


http://ibnlive.in.com/news/real-hero-krishnan-gets-international-recognition/243324-62-128.html

No comments: