Thursday, November 20, 2008

முதலில் நான்...

எந்த மதத்தையும்,எந்த மதத்தாரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்வது எனது நோக்கம் அல்ல.
என்னதான் ஒரு 200 வருடம் முன்பாக எனது முன்னோர்கள் கிறித்துவ மதத்தை தழுவினாலும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது ஆச்சியின் வற்புறுத்தலாலும்,
எதேச்சையாகவும் சில தேவாலயங்களுக்கு செல்லும் பொழுது அதில் கிடைக்காத அன்னியோன்யமும்,ஒட்டுதலும் ஊர்களுக்கு செல்லும் பொழுது இடைப்பட்ட கிராமங்களில் தென்படும்
அய்யனார்,முனீஸ்வர,காளி,அம்மன் மற்றும் முருகன் கோயில்களில் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

அந்த வயதில் இங்குள்ள வினாயகர்,பெருமாள்,சிவன்,அய்யப்பன்,விஷ்ணு மற்றும் ராமர் கோயில்களின் வழிபாட்டு முறைகள்,
பூசாரிகள் மேற்படி நான் குறிப்பிட்ட கோயில்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் பூசாரிகளில் இருந்து வேறுபட்டிருந்ததற்கான காரணத்தை அறிய முடிந்ததில்லை.

இதையெல்லாம் அறிய வைத்த பெருமை தந்தை பெரியாரை நூல்கள் மூலமாக அறிமுகம் செய்து வைத்த என் அப்பாவையே சேரும்.
அனைவரும் ஒரெ மாதிரி சிந்தித்த காலத்தில் சற்று வேறுபட்ட சிந்தனையோடும் ஏன்,எதற்கு,எப்படி என்ற கேள்விக்கணைகளோடும்,மானத்தையும்,அறிவையும்,சுய மரியாதையையும்
அறிவுறுத்திய பெரியாரின் மீது எனக்கு நன்மதிப்பும்,அபிப்ராயமும் வந்து சேர்ந்ததில் ஆச்சிரியமில்லை தான்...

தமிழின் அறிமுகம் என் அம்மாவின் மூலமாக எனக்கு கிடைத்திருந்தாலும்,அதன் மீது பற்றுதல் ஏற்படுவதற்கு தமிழ் வழிக்கல்வியில் என்னை பள்ளி இறுதி வரை படிக்க வைத்த
என் அப்பாவுக்கு போய் சேர்ந்தாலும்,திராவிடத்தையும்,தமிழையும் என் மீது ஒன்றிணைத்த பெருமை தந்தை பெரியாரையே சேரும்.

பிறப்பின் அடிப்படையில்,தொழிலின் அடிப்படையில் கர்ம பலன்,வர்ணாசிரம,மனு தர்மத்தின் மூலமாக சாதிப்பிரிவு வேரூன்றி இருப்பது இந்து மதத்தில்(ஆரிய மதம்) தான்,
மத அடிப்படையில் மூட நம்பிக்கைகள் அதிகமாக பரவிக்கிடப்பது மற்ற மதங்களை விட இந்து மதத்தில் தான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.
(ஆரியர்களால் எழுதப்பட்டாதால் என்னவோ பெரும்பாலும் 80 % திற்கு மேலான கருத்துக்கள் சாதிப்பிரிவு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு அடிப்படையாகவே உள்ளது,கடவுளர்களும் அதற்கு ஒத்துப்போவதாகவே அமையப்பெற்றுள்ளது.)

மூட நம்பிக்கைகளும்,போலிகளும் எந்த மதத்தில் இருந்தாலும் களையறுக்கப்பட வேண்டியது தான்.
ஆனால் மூட நம்பிக்கைகள் அதிக அளவில் வியாபித்திருக்கும்,சங்கராச்சாரிகளுக்கும்,பிரேமானந்தாக்களுக்கும் சாதி அடிப்படையில் வித்தியாசம் பார்க்கும்
நம் திராவிடத்தின்,தமிழின் கழுத்தை நெறிக்கும் இந்து மதத்தில் உள்ள பல களைகளை களைந்தெரிவது கட்டாயமாகும்.

உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கும்,சேதுப்பிரச்சனைக்கும் இந்து மத கொள்கை என்று காரணம் காட்டி சாதி வேறுபாடு
மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு தூபம் போடுவது வேதனை கலந்த உண்மையாகும்.

மதம் என்பதே கொள்ளையர்களின் கூடாரம் தான்,ஒரு இடத்தில் அசிங்கம் இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டுமே ஒழிய,
அந்த அசுத்தம் இருந்த இடத்தில் அதற்கு பதில் வேறு எதை வைப்பது என்று யோசிப்பது போலத்தான் ஒரு மதத்திற்கு பதில் இன்னொரு மதம் என்பது என்று பெரியார் சொல்வார்.
அதனால் தான் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்துக்களை புத்த மதத்திற்கு அம்பேத்கார் மாற்றிய அந்த திட்டத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றும் கூறினார்.
என் மதத்தில் உள்ள குறைபாடுகளை அதிலிருந்தே களைய விரும்புவதாகவும் கூறினார்.
மேலும் குறைந்த பட்சம் கிறித்துவர்கள் மற்றும் முகமதியர்கள் அவர்கள் மதத்தில் இருப்பதை போல இந்துக்கள் அவர்களின் மதத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் வேண்டியது மானமும்,அறிவும்,சுய மரியதையும் கொண்டு சமத்துவ நோக்கோடு அனைவரும் எந்த பாகுபாடும் இல்லாமல் கடவுளை வணங்க வேண்டும் என்பது தான்.

பெரியார் கொள்கைப்படி மனிதனை பிறப்பின் அடிப்படையில்,தொழிலின் அடிப்படையில் பிரிக்கும் சாதியை தான் எதிர்த்தார் ஏனென்றால் பல வித பிரச்சினைகலுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்,ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதுவே காரணமாக அமைந்துள்ளது.அதிலிருந்து மதத்தை பிரிக்க முடியும்,சாதிக்கும்,
மதத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால் மதத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்,இல்லையென்றால் மதத்தையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம் என்று கூறினார்.மதத்திற்கும்,கடவுளுக்கும்
சம்பந்தம் இல்லையென்றால்,கடவுளை தனியாக பிரித்துக் கொள்ளுங்கள்,அவ்விதம் இல்லாத பட்சத்தில் கடவுளையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவோம் என்று கூறினார்.

தனக்கு மட்டும் பிராமணர்களின் ஆதரவு இருந்திருந்தால் தான் அடைய வேண்டிய கொள்கைகளை,இலட்சியத்தை முழுமையாகவும்,விரைவிலும் அடைந்திருக்க முடிந்திருக்கும் என்றும் சொல்வார்.

திராவிடர்கள் பிராமணீயத்திற்கு எதிரானவர்கள் தான்,பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பெரியாருக்கும்,இராச கோபாலாச்சாரிக்கும் உள்ள நட்பை நாடறியும்,இராசாசியின் இறப்பிற்கு வந்து,
எவர் இறப்பிற்கும் அழாத பெரியார் அழுத செய்தியை எந்த வித திரித்தலுக்கும்,குழப்பதிற்கும் உட்படுத்தாமல் துக்ளக் இதழில் வெளியிட்ட சோ வின் மூலமும் கூட அறிந்து கொள்ளலாம்.

பகுத்தறிவு மானத்திற்கும்,அறிவிற்கும்,சுய மரியாதைக்கும்,சமத்துவத்திற்கும் சம்பந்தம் கொண்டது,அது மூட நம்பிக்கைக்கு எதிரானது மட்டுமே தவிர கடவுளுக்கும்,மதத்திற்கும்,ஆன்மீகத்திற்கும் எதிரானது அல்ல.

சாதிப்பிரிவு பற்றியும் பல்வேறு மதங்களின் மூட நம்பிக்கைகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இதன் அடுத்தடுத்த தலைப்புகளில் காணலாம்.
உங்களின் விமர்சனங்களை ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் நீங்கள் எழுதலாம்,தமிழில் எழுத பின்வரும் இணையத்தை பயன்படுத்தவும்
http://ezilnila.com/tane/unicode_Writer.htm

No comments: