Thursday, May 16, 2013

போராட்டம் தொடரட்டும், போய் சேரும் இடம் வரை!!!



இவர்களுக்கு சைட் அடிக்கவும் தெரியும்,


சாட்டையால் அடிக்கவும் தெரியும்.


விசிலடிச்சான் குஞ்சுகள் இப்பொழுது

வீரியமெடுத்த பிஞ்சுகளாக...


தோரணம் கட்டிய கரங்களில்

தமிழீழ பதாகைகள்.


நடிகர்களுக்கு கட்-அவுட் வைத்ததும் இவர்களே...

அரசியல்வாதிகளுக்கு கெட்-அவுட் கூறியதும் இவர்களே...



விடுமுறைக்கு விடுமுறை அளித்தனர்.


தூங்கியும் உண்டும் களிக்கும் விடுமுறையை

தூக்கம் தொலைத்த உறவுகளுக்காக உண்ணாமல் கழித்தனர்.


கவிதை மட்டுமே எழுத முடியும்.

சிலரால் தான் கூட விதையும் தூவ முடியும்!


புதைக்கப்பட்டது உடல்கள் தான்

அவர்கள் ஊட்டிய உணர்வுகள் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன

இவர்களின் மத்தியில்...


உண்டு கொழுத்த சில பிண்டங்கள் உயிரோடு மட்டும் வாழும் நிலையில்

உணவை மறுத்து சில உயிர்கள் உணர்வோடு வாழ்கின்றன.


அடுத்த வேளை சாப்பாட்டிற்கே பசி எடுக்கும்,

ஆறு வேளைக்கு பிறகும் அசராமல் இருந்தது எப்படி?


பசியும் ஓர் உணர்வு தான்...

பலருக்கு வயிற்றில் பசி, சிலருக்கு வாழ்க்கையில் பசி... அது விடுதலைப் பசி.


உங்களின் உடல் குடலை சுருக்கி,

உணர்வுக் கடலை பெருக்கி விட்டீர்கள்...


வீட்டை மீட்டெடுக்க இவர்கள் போராடவில்லை,

நமக்கான நாட்டை மீட்டெடுக்க போராடுகிறார்கள்!


அன்னா ஹசாரேக்கு கொடி பிடித்த மாணவர்களே, நடிகர்களே

நம் அண்ணன், தம்பியின் பக்கமும் திரும்புங்கள்.



மாணவர்களே நீங்கள் தனியாக திணறவில்லை

உங்களின் பின்னால் அணியாக திரண்டிருக்கிறோம்.


தமிழ் ஈழம் வென்றெடுக்க நீங்கள் உண்ணவில்லை...

தமிழ் தாகம் தோற்குமென நாங்கள் எண்ணவில்லை.





No comments: